

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) செயல்பாடுகளில் இருந்து என்.சீனிவாசன் விலகி இருக்க வேண்டுமென்று சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்க கூட்டமைப்பு (எப்ஐசிஏ) வலியுறுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தலைவர் பதவியை தற்காலிகமாக இழந்துவிட்ட சீனிவாசனுக்கு இது மேலும் ஒரு நெருக்கடியாக அமைந்துள்ளது.
ஐசிசி தலைவராக சீனிவாசன் ஜுன் மாதம் பொறுப்பேற்க இருக்கிறார். இந்நிலையில் எப்ஐசிஏ செயல் தலைவர் பால் மார்ஷ் கூறியுள்ளதாவது: சீனிவாசன் குறித்து உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பை ஐசிசியும் கருத்தில் கொள்ள வேண்டும். பிசிசிஐ தலைவராக அவர் இருக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ள தீர்ப்பு ஐசிசி-க்கும் பொருந்தும்.
ஐபிஎல் சூதாட்டத்தில் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனுக்கு தொடர்பு இருப்பதை கருத்தில் கொண்டுதான் பிசிசிஐ தலைவராக சீனிவாசன் இருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே ஐசிசி-யின் செயல்பாடுகளில் இருந்தும் சீனிவாசன் விலக்கப்படுவதே சரியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.