Published : 17 Jan 2014 12:18 PM
Last Updated : 17 Jan 2014 12:18 PM

சென்னையில் உலகக் கோப்பை கபடி: தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு

சென்னையில் வரும் பிப்ரவரியில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கபடி போட்டிக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில், குறிப்பாக கிராம மக்களிடையே, மிகவும் பிரபலமான விளையாட்டு கபடியாகும். உலகக் கோப்பை கபடி போட்டி சென்னை மாநகரில் வரும் பிப்ரவரி 4-வது வாரத்தில் நடைபெற உள்ளது.

ரூ.1 கோடி

இந்த போட்டிகளில் இந்தியா, மெக்ஸிகோ, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, கனடா, இத்தாலி உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த ஆடவர் மற்றும் மகளிர் கபடி அணிகள் கலந்து கொள்கின்றன. சென்னை யில் நடக்கும் இப்போட்டிகளை நடத்துவதற்கு அரசு மானியமாக 1 கோடி ரூபாய் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்தில் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச தரத்திலான ஸ்குவாஷ் விளை யாட்டரங்கில் வருகிற டிசம்பர் மாதத்தில் ஆசியாவிலேயே முதன் முறையாக 8-வது உலக பல்கலைக்கழக ஸ்குவாஷ் வாகையர் போட்டிகள் நடைபெற உள்ளன.

இப்போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன், ஹாங்காங், சீனா உள்ளிட்ட 19 நாடுகளை சார்ந்த ஸ்குவாஷ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். உலக அளவிலான இந்த போட்டிகளை சென்னையில் நடத்திட தமிழக முதல்வர் ஜெயலலிதா 75 லட்சம் ரூபாய் அரசு மானியமாக வழங்க உத்தரவிட்டார்.

ரூ.4.5 கோடி

சென்னை நகரில் ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் மற்றும் மதுரை, திருவண்ணாமலை, கன்னியாகுமரி உள்பட 17 விளையாட்டரங்குகளில் நவீன உடற்பயிற்சிக்கூடம் அமைக்கவும், அதற்கான உபகரணங்களை வாங்குவதற்கும் ரூ.4.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x