Published : 28 Jan 2014 12:02 PM
Last Updated : 28 Jan 2014 12:02 PM

ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க தேர்தல்: மார்ச் 4-ல் உச்ச நீதிமன்றம் விசாரணை

ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க தேர்தலில் லலித் மோடி தலைவராக வெற்றி பெற்றுள்ளார் என இந்திய கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ) அறிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் போதே, தேர்தல் முடிவுகள் தொடர்பான பிசிசிஐ-யின் இந்த அறிவிப்பு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் 21 நிர்வாகிகளுக்கான தேர்தல் நடந்துள்ளது. இத்தேர்தல் முடிவுகளை வெளியிடக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. லலித் மோடியை எதிர்த்துப் போட்டியிட்ட ஆர்.பி. சர்மா வழக்கைத் தொடர்ந் துள்ளார்.

8 கோடி அமெரிக்க டாலர் மோசடி வழக்கு உள்ளதால் லலித் மோடி மீது வாழ்நாள்தடை விதிக்கப்பட்டது. அவர் லண்டனுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இதனால், ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க தேர்தலில் அவர் போட்டியிடக்கூடாது எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கு விசாரணை நீதிபதிகள் ஏ.ஆர். தேவ், ஜே.எஸ்.கேஹர் ஆகியோரடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, “குறைந்தது ரஞ்சிப் போட்டிகளில் விளையாடிய நபர்தான் கிரிக்கெட் சங்க நிர்வாகி யாகச் செயல்பட வேண்டும்” எனக் கூறினர். அப்போது, பிசிசிஐ தரப்பில், ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க தேர்தலில் 33க்கு 26 வாக்குகள் பெற்று மோடி வெற்றி பெற்றது உறுதியாகிவிட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது இதனை வெளிப்படையாக அறிவிக்கக் கூடாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், தேர்தல் முடிவுகள் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் உள்ளன. அம்முடிவுகளை நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும்வரை அறிவிக்கக் கூடாது எனவும் தெரிவித்தனர்.

இவ்வழக்கு வரும் மார்ச் 4-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

வழக்கின் நிறைவில், மோடிக்கு தடை உறுதி செய்யப்பட்டால், ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்துக்கு தடை விதிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. அவ்வாறு தடை விதிக்கப்பட்டால், ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து இந்திய அணியில் விளையாடி வரும் வீரர்களுக்கும் தடை விதிக்கப்படும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x