Published : 20 Apr 2015 02:59 PM
Last Updated : 20 Apr 2015 02:59 PM
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் நடுவர் எச்சரிக்கையை அடுத்து அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வாயில் டேப் ஒட்டிக் கொண்டு விளையாடினார் மும்பை இந்தியன்ஸ் ஆல் ரவுண்டர் கெய்ரன் போலார்ட்.
209 ரன்களைக் குவித்த மும்பை இந்தியன்ஸ் அணி எப்பாடுபட்டாவது வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற மனோநிலையில் நேற்று விளையாடியது.
மும்பை வெற்றிக்கு குறுக்கே நிற்பவர் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூருவின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல்தான். எனவே அவரை ஏதாவது வார்த்தைகளால் சீண்டினால் அவரது ஆட்டத்தை முறியடிக்கலாம் என்று கெய்ரன் பொலார்ட், கிறிஸ் கெய்லை நோக்கி சில வார்த்தைகளை ஏவிவிட்டார். கிறிஸ் கெய்லுக்கும் நேற்று பந்துகள் சரியாகச் சிக்கவில்லை. அவருக்கு வைடாகவே வீசி அவரது மட்டைக்குச் சிக்காமல் வீசினர். இதனால் 24 பந்துகளில் 10 ரன்களையே அவர் எடுத்தார். கடைசியில் ஹர்பஜனிடம் வீழ்ந்தார்.
இந்நிலையில் ஆட்டத்தின் தொடக்கத்தில் பொலார்ட், கெய்லை நோக்கி சில வார்த்தைகளைப் பிரயோகிக்க நடுவர் சரியாகத் தலையிட்டு எச்சரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து அந்த எச்சரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பொலார்ட் தன் வாயில் ஒரு பிளாஸ்டரைப் போட்டு ஒட்டிக் கொண்டு சிறிது நேரம் ஆடினார்.
இது மைதானத்தில் சலசலப்புகளை ஏற்படுத்தியது. கிறிஸ் கெய்ல் அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டுதான் இருந்தார். பெவிலியனில் உட்கார்ந்திருந்த பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், அனில் கும்ளே ஆகியோரும் பொலார்டின் இந்தச் செயலை ரசித்தனர். இது குறித்து பொலர்டிடம் கேட்ட போது ‘சும்மா ஒரு கேளிக்கைக்காகத்தான்’ என்றார்.
ஹர்பஜன் சிங் கூறும் போது, “நடுவர் பொலார்டை அமைதியாக இருக்குமாறு கூறினார். அதனால் வாயில் டேப் ஒட்டிக் கொண்டார். அவர் ஒரு விதமான குணச்சித்திரம் கொண்டவர். இது நல்ல ரசனையின் அடிப்படையில் செய்யப்பட்டதே. இவ்வாறு செய்வது அவருக்குப் பிடித்திருக்கிறது.” என்றார்.
ராயல் சாலஞ்சர்ஸ் அணி 210 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து 191 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி தழுவியது. மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றியைப் பெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT