Published : 15 Jun 2017 08:29 AM
Last Updated : 15 Jun 2017 08:29 AM

இறுதிப் போட்டியில் நுழைவது யார்? - இந்தியா - வங்கதேசம் இன்று பலப்பரீட்சை

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2-வது அரை இறுதியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி இன்று பிர்மிங்காம் நகரில் வங்கதேச அணியுடன் மோதுகிறது.

இந்த ஆட்டம் அண்டை நாடான வங்கதேசத்தை விட இந்திய அணிக்கே சாதகமாக இருக்கும் என கருதப்படுகிறது. ஆனால் கிரிக்கெட்டில் எதுவும் நிச்சயமில்லை. வங்கதேச அணியை குறைத்து மதிப்பிடுவது மெத்தனப் போக்காகவே இருக்கும்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பின்தங்கிய நிலையில் இருந்து வங்கதேச அணி நியூஸிலாந்து அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றதால் அரை இறுதிக்குள் நுழைந்தது. இந்த வெற்றி அந்த அணிக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது.

அதேவேளையில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் பந்து வீச்சு, பீல்டிங்கில் அசத்திய விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அதேபோன்ற செயல்திறனை மீண்டும் வெளிப்படுத்தும் நோக்கில் களமிறங்குகிறது.

பேட்ஸ்மேன்களின் சிறந்த பார்ம், திட்டங்களை களத்தில் சரியாக செயல்படுத்த தொடங்கி உள்ள பந்து வீச்சாளர்கள், சிறந்த பீல்டிங் என எல்லா அடிப்படைகளையும் நிறைவு செய்துள்ள இந்திய அணிக்கு சவால் கொடுக்க வேண்டும் என்றால் மஷ்ரஃப் மோர்டாசா தலைமையிலான வங்கதேச அணி அதிகமாகவே மெனடக்கெட வேண்டும்.

ஏனேனில் அந்த அணி ஒருவகை யில் அதிர்ஷ்டம் காரணமாகவே (இங்கிலாந்து அணியிடம் ஆஸ்தி ரேலியா தோல்வியடைந்ததால்) அரை இறுதிக்குள் கால் பதித்துள் ளது.

இந்தியாவுக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் வங்கதேச அணி அசத்தும் பட்சத்தில் அது அவர்களுடைய கிரிக்கெட் வரலாற் றில் பொன்னான நாளாகவே குறிக்கப்படும். ஆனால் அதே வேளையில் இந்திய அணி வெற்றி பெற்றால் அது சாதாரணமாகவே கருதப்படும்.

பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக இந்திய அணி பெறும் வெற்றிகளுக்கு நிகராக வங்கதேச அணியை வீழ்த்தும் போது யாரும் பெரிதளவில் கொண் டாட முன்வராத சூழ்நிலையே இருப்பதாக கருதப்படுகிறது.

ஆனால் தோல்வி அடைந்தால் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் இருந்து இணையற்ற வகையில் விமர்சனங்கள் எழும். மேலும் விராட் கோலி, அனில் கும்ப்ளே இடையிலான மோதல் விவகாரம் மீண்டும் தலைவலியை உண்டாக்கும்.

இன்றைய ஆட்டத்தில் அஸ்வின் மீண்டும் இடம்பெறுவாரா என்பது சந்தேகமே. ஏனேனில் வங்கதேச வீரர்கள் சுழற்பந்து வீச்சில் சிறப் பாக விளையாடக்கூடியவர்கள். இதனால் அஸ்வினுக்கு பதிலாக உமேஷ் யாதவ் களமிறங்க வாய்ப்பு உள்ளது.

வங்கதேச அணி 2007 உலகக் கோப்பையில் இந்திய அணியை வீழ்த்தியது போன்ற செயல் திறனை மீண்டும் வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இன்றைய ஆட்டத்தை எதிர்கொள்ளக்கூடும்.

2007 உலகக் கோப்பை தொடரில் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா, வங்கதேச அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இந்த நாள் கிரிக்கெட் வரலாற்றில் ‘ரெட் லெட்டர் டே’ எனவும் அழைக்கப்படுகிறது.

அந்த அணியில் விளையாடிய மோர்டசா, ஷாகிப் அல் ஹசன், தமிம் இக்பால், முஸ்பிஹூர் ரகிம் ஆகியோர் தற்போதைய அணியிலும் நட்சத்திர வீரர்களாக உள்ளனர். ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வடிவம் மட்டுமே இந்திய அணியை வங்கதேசம் வீழ்த்த கிடைத்துள்ள வாய்ப்பாக கருதப்படுகிறது.

ஏனேனில் நீண்ட வடிவிலான டெஸ்ட் போட்டி, அதிவிரைவாக நடைபெறும் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் தேவைப்படும் டி 20 ஆட்டங்களில் இந்திய அணிக்கு எதிராக வங்கதேசம் சிறந்த திறனை வெளிப்படுத்தியது இல்லை.

50 ஓவர் போட்டிகளில் சிறிய அணியான வங்கதேசம் கடந்த 3 ஆண்டுகளில் சிறந்த முன்னேற்றம் கண்டுள்ளது, வலுவான அணிகளுடன் போராடும் அளவுக்கு அந்த அணி வீரர்களின் திறன் மேம்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு சொந்த மண்ணில், இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற இருதரப்பு ஒருநாள் போட்டி தொடரை வங்கதேச அணி 2-1 என வென்றது.

இந்த தொடரை வென்றதில் முஸ்டாபிஸூர் ரஹ்மானின் ஆப் கட்டர் வகையிலான பந்து வீச்சு பெரிதும் உதவியது. 2015 உலகக் கோப்பை தொடரின் கால் இறுதியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நடுவர்கள் செய்த தவறுகள் காரணமாக வங்கதேச அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது.

கடந்த ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பையில் பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் வங்கதேசம் தோல்வியடைந்தது. இந்த ஆட்டத்தில் பெரிய அளவிலான ஷாட்டை மேற்கொண்டு வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் வங்கதேச வீரர்கள் செயல்பட்டதால் வெற்றியின் விளிம்பில் இருந்தும் கோட்டை விட்டது.

தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இரு அணியிலும் உள்ள வீரர்களை ஒப்பிட்டு பார்க்கும் போது இந்திய வீரர்களின் தரம், ரேங்கிங் ஆகியவற்றுடன் எந்த வகையிலும் வங்கதேச வீரர்கள் சமமாக இல்லை.

இந்திய அணியின் தொடக்க ஜோடியான ஷிகர் தவண் - ரோஹித் சர்மாவுடன் ஒப்பிடும் போது வங்கதேசத்தின் தமிம் இக்பால், சவுமியா சர்க்கார் ஜோடி மிக சிறப்பாக செயல்படக்கூடிய ஜோடி என்று கூறிவிட முடியாது. அதேவேளையில் தமிம் இக்பால் இந்த தொடரில் நல்ல பார்மில் உள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 70 ஆக உள்ளது.

2-வது வீரராக களமிறங்கும் இம்ரூல் கெய்ஸ் அல்லது சபிர் ரஹ்மானை கனவிலும் கூட விராட் கோலியின் கிளாஸ் பேட்டிங் குடன் ஒப்பிட இயலாது. இதபோல் ஒருநாள் போட்டிகளில் புகழ் வாய்ந்த தோனியுடன், தொடர்ச்சி யாக சிறப்பாக விளையாடாத முஸ்பிஹூர் ரகிமின் திறனையும் இணைத்துக் கூற முடியாது. 300-வது போட்டியில் விளை யாட உள்ள யுவராஜ் சிங்கின் அதிரடி பேட்டிங்குடன் மஹ்மதுல்லா ரியாத்தின் பேட்டிங் கையும் ஒப்பிடுவது கடினம்தான்.

ஆனால் அதேவேளையில் மோர்டசா, தஸ்கின் அகமது, ரூபல் ஹோசைன், முஸ்டாபிஸூர் ரஹ்மான் ஆகியோரை கொண்ட வேகக் கூட்டணி போட்டியின் தினத்தில் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்கக்கூடியதாக விளங்கக்கூடும். இவர்களுடன் ஒப்பிடுகையில் புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் தரம் வாய்ந்தவர்களாகவே திகழ் கின்றனர்.

அணிகள் விவரம்

இந்தியா:

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவண், ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே, யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா.

வங்கதேசம்:

மஷ்ரஃப் மோர்டாசா (கேப்டன்), இம்ருல் கெய்ஸ், மஹ்மதுல்லா, மெகதி ஹசன் மிராஜ், மோசடெக் ஹோசைன், முஸ்பிஹூர் ரகிம், முஸ்டாபிஸூர் ரஹ்மான், ரூபல் ஹோசைன், சன்ஜாமுல் இஸ்லாம், சபிர் ரஹ்மான், ஷபியுல் இஸ்லாம், ஷாகிப் அல்-ஹசன், சவுமியா சர்க்கார், தமிம் இக்பால், தஸ்கின் அகமது.

இடம்: பிர்மிங்காம்

நேரம்: பிற்பகல் 3

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்

முதன் முறை

இந்தியா - வங்கதேசம் அணிகள் 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் இந்தியா 26 ஆட்டங்களிலும், வங்கதேசம் 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இரு அணிகளும் நேருக்கு நேர் சந்திப்பது இதுதான் முதன்முறை.

பிர்மிங்காம் எப்படி?

போட்டி நடைபெறும் பிர்மிங்காமில் இந்தியா 9 ஆட்டங்களில் விளையாடி 6-ல் வெற்றி பெற்றுள்ளது. 3-ல் தோல்வி கண்டுள்ளது. அதேவேளையில் வங்கதேச அணி 2 ஆட்டத்தில் விளையாடி இரண்டிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த மைதானத்தில் 2014-ம் ஆண்டுக்கு பிறகு நடத்தப்பட்ட லிஸ்ட் ஏ போட்டிகளில் முதல் பேட்டிங்கின் சராசரி ஸ்கோர் 258 ஆக உள்ளது. அதேவேளையில் 2-வது பேட்டிங்கின் சராசரி ஸ்கோர் 237 ஆக அமைந்துள்ளது. அதிகபட்சமாக இந்த மைதானத்தில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 326 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளன.

11-வது அரை இறுதி

ஐசிசி நடத்தும் தொடர்களில் இந்திய அணி 11-வது முறையாக அரை இறுதி போட்டியில் விளையாட உள்ளது. இதன் மூலம் அதிக முறை அரை இறுதிக்கு தகுதி பெற்ற ஆஸ்திரேலிய அணியின் சாதனையை இந்திய அணி சமன் செய்ய உள்ளது. 10 முறை அரை இறுதியில் விளையாடி உள்ள இந்திய அணி 6 வெற்றி, 4 தோல்விகளை பதிவு செய்துள்ளது.

அரை இறுதிகள்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி 5-வது முறையாக அரை இறுதியில் விளையாட உள்ளது. இதற்கு முன்னர் விளையாடிய 4 அரை இறுதிகளில் இந்திய அணி 3 வெற்றிகளையும், ஒரு தோல்வியையும் பதிவு செய்துள்ளது.

2013-ல் இலங்கை அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்திலும், 2002-ம் ஆண்டில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவையும், 2000-ம் ஆண்டில் 95 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்க அணியையும் வீழ்த்தி உள்ளது. 1998-ல் மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந் திருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x