Last Updated : 06 Mar, 2014 10:41 AM

 

Published : 06 Mar 2014 10:41 AM
Last Updated : 06 Mar 2014 10:41 AM

சந்தோஷ் டிராபி: மேற்கு வங்கத்திடம் தோற்றது தமிழகம்: அரையிறுதியில் மிசோரமை சந்திக்கிறது

சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியில் தமிழக அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 0-1 என்ற கோல் கணக்கில் மேற்கு வங்கத்திடம் தோல்வி கண்டது.

68-வது சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டி மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக அணி ஏற்கெனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், புதன்கிழமை நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் மேற்கு வங்கத்தை எதிர்கொண்டது.

5 பேருக்கு ஓய்வு

தமிழக அணி வரும் வெள்ளிக்கிழமை அரையிறுதியில் விளையாடவுள்ளதால், முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கும் வகையில் 5 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி கோல் கீப்பர் அருண் பிரதீப், கேப்டன் சுதாகர், சதீஷ், விக்ரம் பாட்டீல், கார்த்திக் ஆகியோருக்குப் பதிலாக ரஜினிகுமார், ஜோபின், பெஸ்கி, அசோக் குமார், அமீருதீன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

இரு ஸ்டிரைக்கர்கள்

இதற்கு முன்னர் நடைபெற்ற ஆட்டங்களில் 4-5-1, 4-4-1-1 என்ற பார்மட்களில் விளையாடிய தமிழக அணி, மேற்கு வங்கத்துக்கு எதிராக 4-4-2 என்ற பார்மட் முறையில் களமிறங்கியது. இந்த சந்தோஷ் டிராபி போட்டியில் தமிழக அணியின் பார்மட் முறையில் மாற்றம் செய்யப்பட்ட முதல் போட்டி இதுதான். முதல்முறையாக இரு ஸ்டிரைக்கர்களுடன் விளையாடியது தமிழகம். ரீகன், அமீருதீன் ஆகியோர் முன்கள வீரர்களாகவும், அசோக் குமார், ஜோபின், சார்லஸ் ஆனந்தராஜ், சாந்தகுமார் ஆகியோர் நடுகள வீரர்களாகவும் களமிறங்கினர்.

முதல் பாதியில் கோல் இல்லை

5 முன்னணி வீரர்கள் இன்றி விளையாடியபோதும் தமிழக அணி, மேற்கு வங்கத்துக்கு சவால் அளிக்கும் வகையில் விளையாடியது. முதல் பாதி ஆட்டத்தில் தமிழக அணிக்கு இரு கோல் வாய்ப்புகள் கிடைத்தபோதும், அமீருதீன் அதை வீணடித்தார். ஒரு வாய்ப்பில் அவர் பந்தை வெளியில் தூக்கியடித்தார். மற்றொரு வாய்ப்பு கோல் கீப்பரால் முறியடிக்கப்பட்டது.

வீரர்கள் மாற்றம்

முதல்பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் கோலடிக்காத நிலையில், 2-வது பாதி ஆட்டத்தில் தமிழகம் ஆதிக்கம் செலுத்துவதற்காக சில மாற்றங்களை செய்தார் தமிழக பயிற்சியாளர் ரஞ்சித். அதன்படி சாந்தகுமாருக்குப் பதிலாக பிரவீண் ராஜாவும், ரீகனுக்குப் பதிலாக கேப்டன் சுதாகரும், அசோக் குமாருக்குப் பதிலாக கார்த்தியும் களம்புகுந்தனர். எனினும் தமிழக அணிக்கு கோல் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

மேற்கு வங்கத்துக்கு முதல் வெற்றி

அதேநேரத்தில் தொடர்ந்து பந்தை நீண்ட தூரம் தூக்கியடித்துக் கொண்டிருந்த மேற்கு வங்க அணி 88-வது நிமிடத்தில் கோல் அடித்து 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இந்த கோலை நீலகண்ட பறையா அடித்தார். அதுவே வெற்றிக் கோலாகவும் அமைந்தது. இதன்மூலம் சந்தோஷ் டிராபி போட்டியின் பிரதான சுற்றில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது மேற்கு வங்கம். இதற்கு முன்னர் நடைபெற்ற 3 போட்டிகளிலுமே மேற்கு வங்கம் தோல்வி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டிக்குப் பிறகு பேசிய தமிழக அணியின் பயிற்சியாளர் ரஞ்சித், “அரையிறுதிக்கு முன்னதாக வீரர் களுக்கு ஓய்வு தேவைப்படுவதாலேயே இன்றைய போட்டியில் 5 வீரர்கள் மாற்றப்பட்டனர். 5 மாற்றங்கள் செய்யப்பட்டாலும் எங்கள் அணி சிறப்பாக ஆடும் என்று நம்பினேன். இந்த ஆட்டத்தில் தோற்றிருப்பதால் மிசோரமுடனான இறுதி ஆட்டத்தில் வீரர்கள் எச்சரிக்கையோடு விளையாடுவார்கள். அரையிறுதியில் வெற்றி பெறுவோம் என எதிர்பார்க்கிறேன்” என்றார். மற்றொரு ஆட்டத்தில் ரயில்வே 3-0 என்ற கோல் கணக்கில் கோவாவைத் தோற்கடித்தது

மிசோரமுடன் மோதல்

“பி” பிரிவில் 6 புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பிடித்த தமிழக அணி, தனது அரையிறுதியில் “ஏ” பிரிவில் முதலிடத்தைப் பிடித்த மிசோரமை சந்திக்கிறது. மிசோரம் அணி தான் விளையாடிய 4 ஆட்டங்களிலும் வெற்றி கண்டு 12 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறது.

அதேநேரத்தில் தமிழக அணியும் முழு பலத்தோடு விளையாடும் என்பதால் முதல் அரையிறுதி ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆட்டம் வெள்ளிக்கிழமை மதியம் 2.30 மணிக்கு நடைபெறுகிறது. மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் மகாராஷ்டிரமும் ரயில்வேயும் மோதுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x