Published : 12 Nov 2013 12:00 AM
Last Updated : 12 Nov 2013 12:00 AM

இங்கிலாந்து கிழட்டு அணியா..?

இங்கிலாந்து அணியில் 30 வயதைக் கடந்தவர்கள் அதிகம் இடம் பெற்றுள்ளதால் அது கிழட்டு அணி என்ற கேலிக்கு உள்ளாகியுள்ளது.

ஆஷஸ் தொடருக்கு இங்கிலாந்து கிழட்டு அணியைத் தேர்வு செய்துள்ளது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் எஸ்எம்எஸ் மூலம் கிண்டல் செய்து வருகின்றனர்.

அந்த அணியில் இடம் பெற்றுள்ளவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 30 வயதைக் கடந்தவர்கள் என்பதே இந்த விமர்சனத்துக்குக் காரணம். முன்னணி வீரர்கள் இயான் பெல் (31), ஜேம்ஸ் ஆண்டர்சன் (31), கேவின் பீட்டர்சன் (33), ஸ்வான் (34) என அனைவருமே 30 வயதைக் கடந்து விட்டனர்.

இந்நிலையில் அணியின் மூத்த வீரரான சுழற்பந்து வீச்சாளர் கிரீம் ஸ்வான் இது தொடர்பாக தங்கள் நாட்டு கிரிக்கெட் வாரிய இணையதளத்தில் கூறியிருப்பது:

இங்கிலாந்து அணியில் மூத்த வீரர் நான்தான். நாங்கள் வயதைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. மேலும் அணியில் இளம் வீரர்களும், மூத்த வீரர்களும் சம அளவில் இடம் பெற்றுள்ளனர். எனவே இதுதான் மிகச் சிறந்த அணி என்று அவர் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியிலும் கூட மூத்த வீரர்கள் அதிகம் இடம் பெற்றுள்ளனர். கேப்டன் மைக்கேல் கிளார்க் (32), ஜார்ஜ் பெய்லி (31), ரேயன் ஹாரீஸ் (34), கிறிஸ் ரோஜர் (36), பிராட் ஹாடின் (36) ஆகியோர் 30 வயதைக் கடந்தவர்கள்.

ஆனால் இவர்கள் அனைவருமே இப்போது சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x