

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வி னுக்கு ஆண்டின் சிறந்த வீரர் விருதை சியெட் நிறுவனம் வழங்கியது.
மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருதை அஸ்வினுக்கு, முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வழங்கினார்.
அஸ்வின் உள்நாட்டு சீசனில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்தார். நியூஸிலாந்து, இங்கி லாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக நடைபெற்ற இந்த தொடர்களில் இந்திய அணி 10 போட்டிகளில் வெற்றி பெற்றது. கடந்த 12 மாதங்களில் அஸ்வின் 99 விக்கெட்கள் கைப்பற்றி அசத்தி உள்ளார்.
நிகழ்ச்சியில் இளம் வீரர் விருது பேட்ஸ்மேன் ஆன சுப்மான் கில்லுக்கு வழங்கப்பட்டது. அவர் இங்கிலாந்து அணியின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் சிறந்த திறனை வெளிப்படுத்தி இருந்தார்.
விழாவில் அஸ்வின் கூறும் போது, “விஜய் ஹசாரே டிராபியில் சிறப்பாக செயல்பட்ட வாஷிங்டன் சுந்தர், ஐபிஎல் தொடரிலும் சிறந்த திறனை வெளிப்படுத்தி உள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய பந்தில் வீசுவது பெரிய சவாலான விஷயம். மேலும் டி20 போட்டிகளில் எப்படி பந்து வீச வேண்டும் என்பதை வாஷிங்டன் சுந்தர் நன்கு அறிந்து வைத்துள்ளார். நாம் முதலில் எப்படி செயல்படுகிறோம் என்பதை பொறுத்துதான் நமக்கான மதிப்பு கிடைக்கும். அந்த வகையில் அவர் சிறப்பாகவே செயல்பட்டுள்ளார். சீரான வேகம், சரியான நீளத்திலும் அவர் சிறப்பாக வீசினார்” என்றார்.
நிகழ்ச்சியின் போது, தனது சிறு வயதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கவாஸ்கரிடம் ஆட்டோகிராப் வாங்கியதையும் அஸ்வின் நினைவு கூர்ந்தார்.