Published : 28 Jan 2014 10:05 AM
Last Updated : 28 Jan 2014 10:05 AM

வெற்றி பெறும் கட்டாயத்தில் இந்திய அணி

நியூஸிலாந்துக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நியூஸிலாந்தின் ஹாமில்டன் நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இத்தொடரில் 2-0 என்ற கணக்கில் பின்தங்கியுள்ள இந்திய அணி, 4-வது போட்டியில் வென்றால் மட்டுமே தொடரைச் சமன் செய்ய வாய்ப்புள்ளது என்பதால், சற்று நெருக்கடியில் களமிறங்குகிறது.

முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா தோற்றபோதும், சிறப்பான போராட்டத்தையே வெளிப் படுத்தியிருந்தது. நேப்பியரில் நடைபெற்ற முதல் போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஹாமில்டனில் நடைபெற்ற 2-வது போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த போதும், டக்வொர்த் லீவிஸ் முறை இப்போட்டியில் பின்பற்றப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் நியூஸிலாந்தை விட கூடுதல் ரன்களையே இந்திய அணி குவித்திருந்தது.

ஆக்லாந்தில் நடைபெற்ற போட்டியில் 315 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இந்திய அணி, 314 ரன்களை எடுத்தது. போட்டி வெற்றி-தோல்வியின்றி முடிந்தது.

இலக்கைத் துரத்தவே விருப்பம்

கடந்த மூன்று போட்டிகளிலும் தோனி டாஸ் வென்று, நியூஸிலாந்தை முதலில் பேட் செய்யும்படி பணித்தது குறிப்பிடத் தக்கது. இம்மூன்று போட்டிகளிலும் இந்தியா வெல்லவில்லை.

தென் ஆப்பிரிக்க பயணத்தின் போதும் முதல் இரு போட்டிகளில் தோனி டாஸ் வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்தார். ஆனால், இரண்டாவதாக பேட் செய்து இலக்கை எட்ட முடியவில்லை. இந்தியாவுக்கு வந்த ஆஸ்திரேலிய அணியுடனான ராஞ்சி மற்றும் நாக்பூர் போட்டிகளில் தோனி டாஸ் வென்றார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கான்பூர் போட்டியிலும் தோனி டாஸ் வென்றார். இந்தப் போட்டிகள் அனைத்திலும் இந்தியா முதலில் பந்து வீச்சையே தேர்வு செய்துள்ளது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்தது கடைசியாக 2013 ஜனவரியில் இங்கிலாந்துக்கு எதிராக கொச்சியில் நடந்த போட்டியில்தான். அதற்குப் பிறகு நடைபெற்ற 18 ஒரு நாள் போட்டிகளிலும் இந்தியா, இரண்டாவதாக பேட் செய்யவே விரும்பியுள்ளது.

அதைப் போலவே, 2012 ஆகஸ்ட் மாதம் இலங்கை பல்லேகெலே மைதானத்தில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட் செய்தது. அதற்குப் பின் வெளிநாடுகளில் நடைபெற்ற எந்தப் போட்டியிலும் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட் செய்வதைத் தேர்வு செய்யவில்லை.

குறிப்பாக இந்தியத் துணைக் கண்டத்துக்கு வெளியே நடந்த போட்டிகளில் 2011 ஜனவரியில் தென்னாப்பிரிக்கா ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த போட்டிக்குப் பிறகு டாஸ் வென்றபோதும் இந்தியா முதலில் பேட் செய்யவேயில்லை. இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்த கடைசி 30 ஒரு நாள் போட்டிகளில் 18-ல் வென்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. ஆக, இந்தப் போட்டியிலும் இந்தியா டாஸ் வென்றால் முதலில் பந்து வீச்சையே தேர்வு செய்யக்கூடும்.

சமபலம்

பேட்டிங்கில் இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் திருப்தியான ஆட்டத்திறனை வெளிப்படுத்த வில்லை. ரோஹித் சர்மா 3-வது போட்டியில் 4 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு, ஃபார்முக்குத் திரும்பியிருக்கிறார். இன்றைய போட்டியில் வேகமாகவும், அதிக ரன்களும் அவர் குவிக்கும்பட்சத்தில் இந்தியா வலுவான ஸ்கோரை எட்டும்.

கோலி முதல் இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளை யாடினார். 3-வது போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ள போதும் அவரை நம்பலாம். தோனி நன்றாகவே விளையாடி வருகி றார். ரெய்னாவின் பங்களிப்பு கவலையளிக்கிறது. அவர் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.

3-வது போட்டியில் பின்வரிசை ஆட்டக்காரர்களான ரவீந்தர ஜடேஜா, அஸ்வின் இருவரும் அபாரமாக விளையாடினர். மற்ற வீரர்களும் ஒத்துழைக்கும் நிலையில் இந்தியா வலுவான இலக்கை நிர்ணயிக்கும் அல்லது பெரிய இலக்கையும் எளிதில் எட்டும். இந்தியாவின் பந்து வீச்சு குறிப்பிடும்படியாக இல்லை. அஸ்வின், ஜடேஜா இருவரும் நீடிப்பார்கள் என்பதால், ஆல்ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னிக்கு இம்முறையும் வாய்ப்புக் கிடைப்பது கடினம்.

மெதுவான ஆடுகளம்

நியூஸிலாந்து முதலில் பேட் செய்யவே விரும்புகிறது. ஹாமில்டன் ஆடுகளம் மெதுவாகவே இருக்கும் என்பதால் இரண்டாவதாக பேட் செய்வது சற்றுக் கடினமாக இருக்கும் என நியூஸிலாந்து கருதுவதால் இன்று நடைபெறும் போட்டியில் நியூஸி. டாஸ் வென்றால் முதலில் பேட்டிங்கையே தேர்வு செய்யும்.

முதலில் பேட் செய்யும் நியூஸிலாந்து, முதல் 30 ஓவர்களில் விக்கெட்டை இழக்காமல் பார்த்துக் கொண்டு பின்னர் அதிரடியாக விளையாடும் உத்தியைப் பின்பற்றி வருகிறது.

ரைடர், கப்டில், பிரென்டன் மெக்கல்லம், ராஸ் டெ.ய்லர், லியூக் ரோஞ்சி போன்ற வலுவான பேட்ஸ்மேன்கள் அந்த அணிக்குப் பலம். ஆனாலும், ஆண்டர்சன் 3-வது போட்டியில் மிக மோசமாக ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

ஆண்டர்சன், டிம் சௌதி, மெக்லீனாகான் போன்ற சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தும், இவர்கள் தொடர்ச்சியான திறனை வெளிப்படுத்தவில்லை. கடந்த போட்டியில், 146 ரன்களுக்குள் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்த போதும், போட்டியை வசப்படுத்த நியூஸிலாந்து பந்துவீச் சாளர்களால் இயலவில்லை.

இரு அணிகளும் சம அளவில் பலம், பலவீனங்களைக் கொண்டுள்ளன. ஆக இன்றைய போட்டியில் எந்த அணி தன் முழுத்திறனையும் வெளிப்படுத்துகிறதோ அந்த அணிக்கே வெற்றி கிடைக்கும்.

அணி விவரம்

இந்தியா: எம்.எஸ். தோனி (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ஷிகர் தவண், ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே, சுரேஷ் ரெய்னா, அம்பட்டி ராயுடு, ஸ்டூவர்ட் பின்னி, ரவீந்தர ஜடேஜா, அஸ்வின், இஷாந்த் சர்மா, முகமது சமி, புவனேஸ்வர் குமார், ஈஸ்வர் பாண்டே, வருண் ஆரோன், அமித் மிஸ்ரா.

நியூஸிலாந்து: பிரென்டன் மெக்கல்லம் (கேப்டன்), கோரே ஆண்டர்சன், மார்ட்டின் கப்டில், மிட்செல் மெக்லீனாகான், நாதன் மெக்கல்லம், கெய்ல் மில்ஸ், ஜேம்ஸ் நீஷாம், லியூக் ரோஞ்சி, ஜெஸ்ஸி ரைடர், டிம் சௌதி, ராஸ் டெய்லர், கேன் வில்லியம்ஸ், ஹாமிஷ் பென்னட்.-பி.டி.ஐ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x