Published : 31 Aug 2016 08:49 AM
Last Updated : 31 Aug 2016 08:49 AM

ஐஸ்எஸ்எல் கால்பந்து: சென்னை அணியில் ஜமைக்கா வீரர்

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் 3-வது சீசன் போட்டிகள் வரும் அக்டோபர் 1-ம் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடரில் கலந்து கொள்ளும் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்சி அணிக்காக ஜமைக்கா கால்பந்து அணியின் டுவைன் கெர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள் ளார்.

கோல்கீப்பரான கெர் இந்த சீசனுக்காக மட்டும் சென்னை அணிக்காக விளையாட உள்ளார். 29 வயதான கெர் ஐஸ்லாந்தில் உள்ள கிளப் ஒன்றில் விளையாடி வந்தார். அந்த கிளப்பின் ஒப்பந்த காலம் முடிவடைந்ததை தொடர்ந்து சென்னை அணியில் இணைந்துள்ளார்.

கடந்த 2007-ம் ஆண்டு ஜமைக்கா அணிக்காக சர்வதேச போட்டிகளில் கெர் அறிமுகமானார். இதுவரை அவர் 15 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் பங்கேற்ற ஜமைக்கா அணியிலும் கெர் இடம் பெற்றிருந்தார்.

இந்த ஆண்டு மே மாதம் கோபா அமெரிக்கா சாம்பியன் பட்டம் வென்ற சிலி அணிக்கு எதிரான நட்பு ரீதியிலான ஆட்டத்தில் ஜமைக்கா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. இந்த ஆட்டத்தின் 2-வது பாதியில் கெர் களமிறங்கினார்.

டுவைன் கெர் ஓப்பந்தம் குறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் மார்க்கோ மெட்ராஸி கூறும்போது,

‘‘டுவைன் கெர் தரம் வாய்ந்த கோல்கீப்பர். ஐரோப்பிய மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர். இந்த சீசனில் சாம்பியன் பட்டத்தை நாங்கள் தக்கவைப்பதில் டுவைன் முக்கிய பங்காற்றுவார்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x