Published : 26 Feb 2014 12:00 AM
Last Updated : 26 Feb 2014 12:00 AM

இந்தியா-வங்கதேசம் இன்று மோதல்: சீசனின் முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா இந்தியா?

வங்கதேசத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் வங்கதேசமும் இன்று மோதுகின்றன.

ஆசிய பிராந்தியத்தில் வலுவான அணியாகத் திகழும் இந்திய அணியின் கேப்டன் தோனி காயம் காரணமாக விலகிவிட்டார். இதனால் புதிய கேப்டனான விராட் கோலியின் தலைமையில் களமிறங்குகிறது. ஆசிய கோப்பை போட்டியில் 5 முறை சாம்பியனான இந்திய அணி, சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூஸிலாந்து அணிகளிடம் தோல்வி கண்டது. அதனால் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆசிய கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்தியா.

புஜாரா இடம்பெறுவாரா?

இந்திய அணியைப் பொறுத்தவரையில் தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவண், ரோஹித் சர்மா ஆகிய இருவரும் இந்திய துணைக் கண்டத்தில் எப்போதுமே சிறப்பாக விளையா டக்கூடியவர்கள் என்பதால் இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத் தித் தருவார்கள் என எதிர்பார்க் கப்படுகிறது.

மிடில் ஆர்டரில் கேப்டன் விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே, தினேஷ் கார்த்திக் ஆகியோர் பலம் சேர்க்கிறார்கள். 6-வது பேட்ஸ்மேனாக சேதேஷ்வர் புஜாரா அல்லது அம்பட்டி ராயுடு இடம்பெறலாம். 7-வது பேட்ஸ்மேனாக ஆல்ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி இடம்பெற வாய்ப்புள்ளது.

இந்திய பேட்டிங்கின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் கோலி, இந்த முறை கேப்டன் பதவியிலும் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். தொடர் தோல்வி

களால் கேப்டன் தோனியை மாற்ற வேண்டும் என விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், கேப்டன் பதவியில் கோலி சிறப்பாக செயல்படும்பட்சத்தில் அது அவருக்கு மேலும் பலம் சேர்ப்பதாக அமையும்.

ஐபிஎல் போட்டியில் ரூ.12.5 கோடிக்கு ஏலம் போயிருக்கும் தினேஷ் கார்த்திக், இந்திய அணியில் நிரந்தர இடத்தைப் பிடிப்பதற்கு இந்தத் தொடர் நல்ல வாய்ப்பாக இருக்கும். இதேபோல் ஸ்டூவர்ட் பின்னி, பேட்டிங் மட்டுமின்றி மித வேகப்பந்து வீச்சிலும் இந்தியாவுக்கு பலம் சேர்க்கிறார். வேகப்பந்து வீச்சை முகமது சமி, புவனேஸ்வர் குமார் கூட்டணியும், சுழற்பந்து வீச்சை ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் கூட்டணியும் கவனிக்கும் என தெரிகிறது.

பலவீனமான வங்கதேசம்

தொடர் தோல்வி, அணித் தேர்வில் சர்ச்சை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் சிக்கியுள்ள வங்கதேச அணியில் தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் காயம் காரணமாக விளையாடவில்லை. ஆல்ரவுண்டர் ஷகிப் அல்ஹசனுக்கு 3 போட்டிகளில் தடை விதிக்கப்பட்டிருப்பதால் அவரும் இந்தப்போட்டி யில் விளையாடமாட்டார். இரு முன்னணி வீரர்கள் விளையாடாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

இதேபோல் மூத்த வீரரான மோர்ட்டஸா முழு உடற்தகுதி பெற முடியாமல் போராடி வருகிறார். அதனால் அவர் விளையாடுவது சந்தேகமே. இதேபோல் அணித்தேர்விலும் சர்ச்சை எழுந்தது. தேர்வுக்குழு தலைவர் தன்னை கலந்தா லோசிக்காமலேயே அணியைத் தேர்வு செய்துவிட்டார் என கேப்டன் ரஹிம் வெளிப்படையாகவே குற்றம்சாட்டினார். இம்ருள் கெய்ஸ் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். மொத்தத்தில் இந்தியாவுடன் ஒப்பிடுகையில் வங்கதேச அணி பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் பலவீனமான அணியாகவே திகழ்கிறது. அதனால் 2014 சீசனின் முதல் வெற்றியை இந்தியா இன்று பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவண், அஜிங்க்ய ரஹானே, சேதேஷ்வர் புஜாரா, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், புவனேஸ்வர் குமார், முகமது சமி, வருண் ஆரோன், ஈஸ்வர் பாண்டே, அமித் மிஸ்ரா, அம்பட்டி ராயுடு, ஸ்டூவர்ட் பின்னி.

வங்கதேசம்: முஷ்பிகுர் ரஹீம் (கேப்டன்), அல்-அமீன் ஹுசைன், அராஃபட் சன்னி, மஸ்ரஃபே மோர்ட்டஸா, நயீம் இஸ்லாம், ரூபெல் ஹுசைன், ஷகிப் அல்ஹசன், ஜியாவூர் ரஹ்மான், அப்துர் ரசாக், அனாமுல் ஹக், இம்ருள் கெய்ஸ், மோமினுல் ஹக், நாசிர் ஹுசைன், சம்சுர் ரஹ்மான், சோஹாக்

‘வங்கதேசத்தை எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோம்’

வங்கதேச அணியை எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோம் என இந்திய விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

வங்கதேச அணியின் முன்னணி வீரர்களான தமிம் இக்பால், ஷகிப் அல்ஹசன் ஆகியோர் விளையாடாததால் அந்த அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கார்த்திக் மேலும் கூறியிருப்பதாவது: வங்கதேசம் சிறந்த அணியாகும். சமீபத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் அந்த அணி வெற்றிக்கு மிக அருகில் சென்றுதான் தோற்றது. அந்த அணி சிறந்த ஒருநாள் அணி என்பது எல்லோருக்கும் தெரியும் என்றார்.

தமிம் இக்பால், அல்ஹசன் விலகல் குறித்துப் பேசிய கார்த்திக், “அவர்கள் இருவருமே அணியின் மிக முக்கியமான வீரர்கள். அவர்களுக்குப் பதிலாக யார் இடம்பெறுகிறார்கள் என்பது குறித்து எங்களுக்குத் தெரியவில்லை” என்றார்.

சாதிப்பாரா கோலி?

இந்திய கேப்டன் கோலி வங்கதேச மண்ணிலும், வங்கதேச அணிக்கு எதிராகவும் எப்போதுமே சிறப்பாக விளையாடக்கூடியவர். வங்கதேச மண்ணில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 4 சதம், 3 அரைசதம் என மொத்தம் 732 ரன்கள் குவித்துள்ளார்.

கடந்த ஆசிய கோப்பை (2012) போட்டியில் விராட் கோலி இரண்டு சதம், ஓர் அரைசதம் உள்பட 357 ரன்கள் குவித்தார். அதிலும் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் 183 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த முறை கேப்டனாகவும் பொறுப்பேற்றுள்ள கோலி, இரண்டிலும் ஜொலிப்பாரா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இதுவரை கோலி தலைமை யில் இந்திய அணி ஒரு தோல்வி யையும், 7 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x