Published : 07 Feb 2014 10:20 AM
Last Updated : 07 Feb 2014 10:20 AM

டெஸ்ட்: இலங்கைக்கு எதிராக 409 ரன்கள் குவித்தது வங்கதேசம்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 8 விக்கெட் இழப்புக்கு 409 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் ஷம்சூர் ரஹ்மான் 106 ரன்கள் எடுத்தார். இம்ருல் கயஸ் 115 ரன்கள் எடுத்தார்.

முன்னதாக இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 587 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. நேற்றுடன் 3 நாள் ஆட்டம் முடிந்துள்ள நிலையில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் இலங்கையை விட 178 ரன்கள் பின்தங்கியுள்ளது. மேலும் 2 விக்கெட் கைவசம் உள்ள நிலையில் இன்று தனது முதல் இன்னிங்ஸை வங்கதேசம் தொடர இருக்கிறது.

முன்னதாக 1 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் என்ற முந்தைய நாள் ஸ்கோருடன் வங்கதேசம் நேற்று தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது. ஷம்சூர் ரஹ்மான், இம்ருல் கயஸ் ஆகியோர் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். இவர்களது சிறப்பான ஆட்டத்தால் வங்கதேச அணியின் ஸ்கோர் உயரத் தொடங்கியது.

ரஹ்மான், கயஸ் இருவருமே அடுத்தடுத்து சதமடித்தனர். அணியின் ஸ்கோர் 232 ஆக இருந்தபோது இந்த ஜோடி பிரிந்தது. ரஹ்மான் 106 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மாமினுல் ஹக் 13 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதையடுத்து சாஹிப் அல் ஹசன் கயஸுடன் ஜோடி சேர்ந்தார்.

அணியின் ஸ்கோர் 259 ஆக இருந்தபோது கயஸ் ஆட்டமிழந்தார். அவர் 218 பந்துகளை எதிர்கொண்டு 115 ரன்கள் எடுத்தார். சாஹிப் அல் ஹசன் 50, நசீர் ஹுசைன் 42 என ரன்கள் எடுத்ததால் வங்கதேசத்தின் ஸ்கோர் சீராக உயர்ந்தது.

3-வது நாள் ஆட்ட முடிவில் வங்கதேசம் 8 விக்கெட் இழப்புக்கு 409 ரன்கள் எடுத்துள்ளது. முகமதுல்லா 30 ரன்களுடனும், அல்-அமீம் ஹுசைன் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை தரப்பில் அஜந்தா மெண்டிஸ் 4 விக்கெட்டும், மெத்யூஸ் 3 விக்கெட்டும் எடுத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x