Published : 27 Jan 2017 03:49 PM
Last Updated : 27 Jan 2017 03:49 PM
சூதாட்ட வழக்கில் சிக்கி தடை செய்யப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், தான் குற்றம்சாட்டப்பட்ட அதே சூதாட்டத்தில் சிக்கியவர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிவரும் போது பிசிசிஐ தன்னை மட்டும் வஞ்சிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்காட்லாந்து கிரிக்கெட் லீகில் ஆட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி கோரியுள்ள ஸ்ரீசாந்த் தனக்கு இன்னும் பதில் கிடைக்காதது குறித்து தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு தெரிவித்ததாவது:
“எனக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை, ஆனால் வெளியில் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்றால் எனக்கு பிசிசிஐ அனுமதி மறுத்து விட்டது என்று.
ஸ்காட்லாந்தில் விளையாட என்.ஓ.சி. கேட்டு கடந்த ஒன்றரை மாதங்களாக நான் பிசிசிஐ-க்கு கடிதம் எழுதி வருகிறேன். எனக்கு இன்னும் பதில் இல்லை, கேரளா கிரிக்கெட் சங்கத்திற்கு அவர்கள் ஒருவேளை பதில் அனுப்பியிருக்கலாம், ஆனால் எனக்கு மின்னஞ்சலில் இன்னமும் நான் பதில் பெறவில்லை.
மேலும் எனக்கு ஆயுள் தடை விதிக்கப்பட்டது என்ற கடிதத்தை பிசிசிஐ இன்னமும் எனக்கு அனுப்பவில்லை. இப்போது பிசிசிஐ-யில் அனைத்தும் மாறிவிட்டன (லோதா கமிட்டி, உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்குப் பிறகு), இம்மாதம் 29-ம் தேதி வரை நான் காத்திருக்கிறேன்.
சூதாட்டத்தில் சிக்கியவர்கள் இன்னமும் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடி வருகின்றனர். உச்ச நீதிமன்றத்திடம் அளிக்கப்பட்ட சீலிடப்பட்ட உறையில் உள்ள 13 பேர் பற்றிய விவரங்களை ஒவ்வொரு இந்தியரும் தெரிந்து கொள்ள வேண்டிய உரிமை உள்ளது. இதில் சில கிரிக்கெட் வீரர்கள் பெயர்களும் உள்ளன. குற்றம்சாட்டப்பட்ட மற்ற வீரர்கள் காக்கப்படுகின்றனர், ஆனால் நான் மட்டும் வஞ்சிக்கப்பட்டுள்ளேன்.
அந்த உறையில் உள்ள 13 பேரின் பெயர்கள் தெரிய வேண்டும் என்பதற்காக நான் போராடவில்லை. குற்றம்சாட்டப்பட்டனர் என்பதற்காகவே எனக்கு ஏற்பட்டது அவர்களுக்கும் நிகழ வேண்டுமென்று நான் மனதார நினைக்கவில்லை. ஆனால் சட்டம் ஏன் பாரபட்சமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதே என் கேள்வி.
கிரிக்கெட் மூலம் என் வாழ்வாதாரத்தை பேணி காக்க விரும்புகிறேன், எனக்கு இரண்டு குழந்தைகள். நானும் எனது வாய்ப்புக்காக காத்திருக்கிறேன், 4 ஆண்டுகள் கழிந்து விட்டன, அவர்கள் ஏன் புரிந்து கொள்ள மறுக்கின்றனர்?” என்றார் ஸ்ரீசாந்த்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT