Published : 03 Nov 2014 11:31 AM
Last Updated : 03 Nov 2014 11:31 AM

ரஹானே, தவன் சதம்; இந்தியா அபார வெற்றி

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 169 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது இந்தியா.

கட்டக்கில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவுக்குப் பதிலாக அக்ஷர் படேல் சேர்க்கப்பட்டார். டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்ய, அஜிங்க்ய ரஹானேவும், ஷிகர் தவனும் இந்தியாவின் இன்னிங்ஸை தொடங்கினர். இரு முறை ஆட்டமிழப்பதிலிருந்து தப்பினார் தவன். 38 ரன்களில் இருந்தபோது தப்பிப் பிழைத்த ரஹானே, 61 பந்துகளில் அரைசதம் கண்டார்.

அவரைத் தொடர்ந்து தொடர்ச்சியாக இரு பவுண்டரி ஒரு சிக்ஸரை விரட்டி 64 பந்துகளில் அரைசதம் கண்டார் தவன். இதன்பிறகு இருவரும் வேகமாக ஆட, இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 25-வது ஓவரை வீசிய கேமேஜே அச்சுறுத்தும் வகையில் ஒரு பீமரை வீச, அதே ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசி பதிலடி கொடுத்தார் ரஹானே.

முதல் விக்கெட்டுக்கு 231

இதன்பிறகு கிடைத்த ஓவர்களையெல்லாம் இருவரும் விளாச, 32-வது ஓவரில் 200 ரன்களைக் கடந்தது இந்தியா. ரஹானே 99 பந்துகளில் சதமடித்தார். இது அவருடைய 2-வது சதமாகும். அதைத்தொடர்ந்து அடுத்த ஓவரில் சிக்ஸர் அடித்து சதத்தை (96 பந்துகளில்) நிறைவு செய்தார் தவன். இது அவருடைய 6-வது சதம். இந்தியா 231 ரன்களை எட்டியபோது இந்த ஜோடி பிரிந்தது. ஷிகர் தவன் 107 பந்துகளில் 3 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 113 ரன்களும், அஜிங்க்ய ரஹானே 108 பந்துகளில் 2 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 111 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ரெய்னா அரை சதம்

இதையடுத்து ரெய்னாவும், கேப்டன் கோலியும் இணைந்தனர். கோலி நிதானமாக ஆட, மறுமுனையில் சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் பறக்கவிட்ட ரெய்னா 33 பந்துகளில் அரை சதமடித்தார். அவர் 34 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு கோலி ஆட்டமிழக்க, அம்பட்டி ராயுடுவும், விருத்திமான் சாஹாவும் ஜோடி சேர்ந்தனர். 49-வது ஓவரில் ராயுடு 27 ரன்களில் வெளியேற, பின்னர் களமிறங்கிய அக்ஷர் படேல் இரு சிக்ஸர்களை விளாச, 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 363 ரன்கள் குவித்தது இந்தியா. சாஹா 10, படேல் 4 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை தரப்பில் ரன்திவ் 10 ஓவர்களில் 78 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இலங்கை 194-க்கு ஆல்அவுட்

பின்னர் பேட் செய்த இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர் தில்ஷான் 16 ரன்களில் வெளியேற, சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. சங்ககாரா 13, தரங்கா 28, பிரசன்னா 5, ஜெயவர்த்தனா 43 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 126 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இலங்கை.

சிறிது நேரம் போராடிய கேப்டன் மேத்யூஸ் 23 ரன்களிலும், பிரியாஞ்சன் 12 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். பின்னர் வந்த ரன்திவ் 5 ரன்களிலும், தமிகா பிரசாத் ரன் ஏதுமின்றியும் வெளியேற, கடைசி விக்கெட்டாக திசாரா பெரேரா 29 ரன்களில் ஆட்டமிழக்க, இலங்கை 39.2 ஓவர்களில் 194 ரன்களுக்கு சுருண்டது. இஷாந்த் சர்மா 4 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ், அக்ஷர் படேல் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ரெய்னா 5,000

# தனது 200-வது போட்டியில் விளையாடிய ரெய்னா அதில் 44 ரன்கள் எடுத்தபோது ஒருநாள் போட்டியில் 5,000 ரன்களை எட்டினார். இந்த மைல்கல்லை எட்டிய 11-வது இந்தியர் ரெய்னா.

# இந்தியா குவித்த 363 ரன்கள்தான் கட்டக் மைதானத்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர்.

# இந்தியாவின் தொடக்க வீரர்கள் இருவரும் சதமடித்திருப்பது 6-வது முறையாகும்.

# இந்தியாவின் தொடக்க ஜோடி 200 ரன்களுக்கு மேல் குவிப்பது 4-வது முறையாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x