

பனிச் சறுக்கில் விபத்துக்குள்ளான கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமாக்கரின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களிடமும், தங்கள் குடும்பத்தினரிடமும் தகவல்கள் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாமென்று ஊடகங்களுக்கு ஷுமாக்கரின் மனைவி கொரினா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரான்ஸின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் கடந்த 29-ம் தேதி பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்த ஷூமாக்கர் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்றார். நேற்று அவரது உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அவரது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும் அவர் கோமா நிலையில் இருந்து இன்னும் மீளவில்லை.
இதனிடையே ஷூமாக்கரின் மனைவி கொரினா ஷுமாக்கர் பத்திரிகை மற்றும் தொலைக் காட்சி சேனல்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் ஷூமாக்கருக்கு ஏற்பட்டுள்ள விபத்தால் நாங்கள் அனைவருமே பெரும் துன்பத்தில் இருக்கிறோம். எனவே இந்த சூழ்நிலையில் எங்களை சற்று தனிமையில் இருக்க அனுமதிக்க வேண்டும். மருத்துவமனைக்கு வந்த எங்களிடம் தொடர்ந்து கேள்விகளைக் கேட்பது துன்பத்தை மேலும் அதிகரிப்பதாகவே இருக்கிறது. எனவே மருத்துவமனை முன்பு கூடியிருக்கும் ஊடகத்தினர் அனைவரும் அங்கிருந்து சென்று விடுங்கள் என்று கொரினா ஷூமாக்கர் கூறியுள்ளார்.