Published : 23 Jun 2017 04:47 PM
Last Updated : 23 Jun 2017 04:47 PM
அனைவருக்கும் முன்னரே தனது திறமையைப் பாராட்டி ஊக்குவித்தவர் சச்சின் டெண்டுல்கர்தான் என்று ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து ஹர்திக் பாண்டியா கூறியதாவது:
நான் அப்போது என் முதல் போட்டியில் கூட ஆடியிருக்கவில்லை. ஹைதராபாத்தில் ஒரு முக்கியப் போட்டிக்காகச் சென்றிருந்த போது சச்சின் டெண்டுல்கர் என்னை அழைத்து பிறகு தன்னைச் சந்திக்குமாறும் சில விஷயங்கள் பேச வேண்டியுள்ளது என்றும் என்னிடம் தெரிவித்தார்.
ஆனால் அதன் பிறகு மும்பையில்தான் அவருடன் பேச வாய்ப்புக் கிடைத்தது. அவர் என்னிடம் என்ன கூற வேண்டுமென்று விரும்பினார் என்பதை அறிய ஆவலாக இருந்தேன். ஆனால் அவரைச் சந்தித்த போது நான் ஆடும் விதம் பற்றி புகழ்ந்து கூறினார். மேலும் ‘நான் இதை உன்னிடம் கூறக்கூடாது. இருந்தாலும் நீ விளையாடும் விதம் உன்னிடம் உள்ள திறமை ஆகியவை உன்னை இன்னும் ஓரு அல்லது ஒன்றரை ஆண்டுகளில் இந்திய அணியில் இடம்பெறச் செய்யும்’ என்று சச்சின் என்னிடம் கூறியதை என்னால் மறக்க முடியாது.
இவ்வாறு கூறினார் ஹர்திக் பாண்டியா.
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் சரிந்து கொண்டிருந்த இந்திய அணிக்கு தன் அதிரடியினால் நம்பிக்கை ஊட்டினார் ஹர்திக் பாண்டியா. கபில்தேவ் போன்றவர்கள் அப்படித்தான் கடும் தோல்வி நிலையிலிருந்து விடாப்பிடியாக வெற்றிக்காகப் போராடுவார்கள். இவரது ஆட்டம் அன்று கபில்தேவை நினைவூட்டியது.
இது வரை 12 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ள ஹர்திக் பாண்டியா 265 ரன்களையே எடுத்திருந்தாலும் அவரது சராசை 53. ஸ்ட்ரைக் ரேட் 140.95 என்பது குறிப்பிடத்தக்கது. பவுலிங்கில் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT