Published : 21 Feb 2014 11:11 AM
Last Updated : 21 Feb 2014 11:11 AM

தோனியை இப்போது நீக்கினால் நிலைமை மேலும் மோசமாகும்: சௌரவ் கங்குலி கருத்து

டெஸ்ட் போட்டிகளில் தோனியின் தலைமை விரும்பத்தக்கதாக இல்லைதான். அதற்காக அவரை இப்போதே நீக்கினால் அணியின் நிலை மேலும் மோசமாகிவிடும் என்று முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து படுதோல்வியடைந்து வருவதை அடுத்து கேப்டன் தோனி மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. கேப்டன் பொறுப்பில் இருந்து அவரை உடனடியாக நீக்க வேண்டுமென்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக இருந்த கங்குலி நேற்று இது தொடர்பாகக் கூறியது:

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் ஓராண்டுக்கும் குறைவான காலமே உள்ளது. இந்த சூழ்நிலையில் கேப்டனை மாற்றுவது என்பது அணிக்கு பின்னடைவைத்தான் ஏற்படுத்தும்.

கேப்டன் என்ற முறையில் டெஸ்ட் போட்டிகளில் தோனியின் செயல்பாடு பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக வெளிநாடுகளில் விளையாடும்போது எவ்வாறு செயல்படுகிறோம் என்பதை தோனி மீண்டும் ஒருமுறை மறுபரிசீலனை செய்துகொள்ள வேண்டும் என்றார் கங்குலி.

தோனி ‘ரிஸ்க்’ எடுக்க வேண்டும் - திராவிட்

போட்டியின் ஆடுகளத்தில் நிலைமையை உடனடியாக புரிந்து கொண்டு செயல்படும் திறமை தோனிக்கு அதிகம் உண்டு. அதுதான் அவரை வெற்றிகரமான கேப்டனாக்கியது. அதே நேரத்தில் வெளிநாடுகளில் விளையாடும்போது வெற்றிபெற வேண்டுமென்றால் தோனி கூடுதலாக “ரிஸ்க்” எடுக்க வேண்டும்.

தற்காப்பு முறையில் ஆட்டத்தை எதிர்கொள்ளக் கூடாது. ஏற்கெனவே டெஸ்ட் போட்டிகளில் வரிசையாக தோல்வியடைந்துள்ள நிலையில் சற்று முன்னதாகவே நிலைமையைப் புரிந்துகொண்டு அவர் செயல்பட்டிருக்க வேண்டும்.

நமது அணியின் பந்து வீச்சின் மீது அவருக்கு அதிக நம்பிக்கையில்லை என்பதைத்தான் தோனியின் அணுகுமுறை காட்டுகிறது. தென்னாப்பிரிக்காவில் டர்பனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 146 ஓவர்களுக்குப் பின்னும் அவர் புதிய பந்தை கேட்டுப் பெறவில்லை. நமது பந்து வீச்சாளர்கள் புதிய பந்தின் மூலம் விக்கெட் எடுக்க முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லை என்பதையே இது காட்டுகிறது. அதே நேரத்தில் அதிக ரன் கொடுத்துவிடக் கூடாது என்ற நோக்கத்திலும் பழைய பந்தையே அவர் பயன்படுத்த முடிவு செய்திருக்கலாம். எனவே அவர் அதிகம் தற்காப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது புரிகிறது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலி யாவில் டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்த உடனேயே தோனியின் தலைமை உத்தியை மறுபரிசீலனை செய்திருக்க வேண்டும். வெளிநாடுகளில் விளையாடும் டெஸ்ட் போட்டிகளில் தான் தோனியின் தலைமை விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

ஒருநாள் கிரிக்கெட், இருபது ஓவர் கிரிக்கெட்டில் நமது அணிக்கு உலகக் கோப்பையையும் சாம்பியன்ஸ் டிராபியையும் வென்று தந்த திறமையான கேப்டன் அவர் என்பதை எவரும் மறுக்க முடியாது. இந்தியாவின் அணியை தரவரிசையில் முதலிடத்துக்கு எடுத்துச் சென்றதும் அவர்தான். தோனி தனது தலைமைப் பொறுப்புக்கு வலு சேர்த்தால்தான் அணி வெற்றிகளைக் குவிக்க முடியும். ரசிகர்களுக்கு அதுவே அதிக மகிழ்ச்சியளிக்கும் என்றார் திராவிட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x