Published : 20 Jun 2017 06:09 PM
Last Updated : 20 Jun 2017 06:09 PM

தோனி, யுவராஜ் சிங் எதிர்கால முடிவை அவர்களிடம் விடாமல் தேர்வுக்குழு முடிவெடுக்க வேண்டும்: திராவிட்

2019 உலகக்கோப்பைக்கு இந்திய அணி முழு அளவில் தயாராக தோனி, யுவராஜ் சிங் ஆகியோரது சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் குறித்த முடிவை அணித்தேர்வுக்குழுவும் நிர்வாகமும் எடுக்க வேண்டும் என்று ராகுல் திராவிட் கூறியுள்ளார்.

ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போவில் அவர் இது குறித்துக் கூறும்போது, வீரர்கள் கையில் முடிவெடுக்கும் விவகாரத்தை விடக்கூடாது, தேர்வுக்குழுவும் நிர்வாகவும் முடிவெடுக்க வேண்டும் என்பதை சூசகமாக வலியுறுத்தினார்.

“இவர்கள் இருவர் குறித்த முடிவை தேர்வுக்குழுவும் நிர்வாகவும் எடுப்பது அவசியம். இந்திய கிரிக்கெட்டிற்கான வரைபடம் தேவை என்றால், அதில் இந்த இரண்டு கிரிக்கெட் வீரர்களின் பங்கு என்னவாக இருக்கும் என்பதை முடிவு செய்ய வேண்டும். இருவருக்குமே இடம் இருக்கிறதா? அல்லது இருவரில் ஒருவருக்குத்தான் இடமிருக்கிறதா?

இதற்கான மதிப்பீட்டை ஒரு ஆண்டு காலத்தில் செய்யப்போகிறோமா அல்லது 6 மாதகாலத்தில் செய்ய போகிறோமா? இருக்கும் திறமைகளை நோக்கிச் செல்லப் போகிறோமா? இந்த இருவரை நோக்கி நாம் செல்லும் முன் புதிய திறமைகள் நம் அணிக்கு எந்த விதத்தில் பங்களிப்பு செய்ய முடியும் என்பதையெல்லாம் முடிவு செய்ய வேண்டும்.

மே.இ.தீவுகளுக்கு வலுவான அணியுடன் செல்ல முடிவெடுத்துள்ளனர், குறைந்தது ஆடும் 11 வீரர்களிலாவது வேறு சிலருக்கு வாய்ப்பளிப்பது அவசியம். இதனை நாம் செய்யவில்லை எனில் ’நாம் நிறைய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை இவர்கள் இருவர்தான் நம்மிடம் உள்ளனர்’ என்று கூறும் நிலைமை ஏற்பட்டு விடும். எனவே ‘அனைவருக்கும் வாய்ப்பளித்து முயற்சி செய்து பார்த்தோம், ஆனால் யுவராஜ், தோனிதான் பொருத்தமானவர்களாகப் படுகிறார்கள் இவர்கள் நன்றாக ஆடுகின்றனர். இவர்கள்தான் நம்மை உலகக்கோப்பை இறுதிக்கு அழைத்துச் செல்வார்கள்’ என்று கூறினால் யாரும் தேர்வுக்குழு முடிவு குறித்து புகார்கள் எழுப்பப்போவதில்லை” என்றார் திராவிட்.

அதாவது புதிய வீரர்களுக்கு வாய்ப்பேயளிக்காமல் இவர்கள் இருவரையுமே நம்பியிருப்பது சரியாகாது என்கிறார் திராவிட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x