Published : 12 Nov 2014 11:08 AM
Last Updated : 12 Nov 2014 11:08 AM

வெற்றியைக் கோட்டைவிட்டது சென்னை

புனேவில் நேற்று நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி.-புனே சிட்டி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

16-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை இலானோ கோட்டைவிட்டதால் வெற்றி வாய்ப்பை மட்டுமின்றி முதலிடத்தைப் பிடிக்கும் வாய்ப்பையும் இழந்தது சென்னை அணி. அதேநேரத்தில் புனே கோல் கீப்பர் அரிந்தாம் சென்னையின் பல கோல் வாய்ப்புகளை முறியடித்து தனது அணியை காப்பாற்றினார்.

விறுவிறுப்பாக சென்ற இந்த ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் புனே கோல் அடித்தது. அந்த அணியின் மிட்பீல்டர் இஸ்ரேல் கூரங் கொடுத்த அற்புதமான கிராஸில் மிக எளிதாக கோலடித்தார் மற்றொரு மிட்பீல்டரான கோஸ்டாஸ் கட்சூரனிஸ்.

இதன்பிறகு 16-வது நிமிடத்தில் சென்னை அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை இலானோ வெளியில் அடித்தார். 8 கோல்களுடன் அதிக கோலடித்தவர்கள் வரிசையில் முன்னிலையில் இருக்கும் ப்ரீ கிக் ஸ்பெஷலிஸ்டான இலானோ பெனால்டியை கோலாக்குவார் என எதிர்பார்த்த ரசிகர்கள், அவர் அதை கோட்டைவிட்டபோது அதிர்ச்சியடைந்தனர்.

அதேநேரத்தில் சென்னை ஸ்டிரைக்கர் மென்டோஸா தொடர்ந்து கோலடிக்க கடுமையாக போராடினாலும் அவருடைய அனைத்து முயற்சிகளையும் முறியடித்தார் புனே கோல் கீப்பர் அரிந்தாம்.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 58-வது நிமிடத்தில் கோலடித்து புனேவுக்கு பதிலடி கொடுத்தது சென்னை. பல்வந்த் சிங்கும், மென்டோஸாவும் இணைந்து புனே பின்கள வீரர்கள் 3 பேரை வீழ்த்தி பந்தை முன்னோக்கி கொண்டு வந்தனர். கோல் கம்பத்தின் அருகே சென்றபோது பல்வந்த் சிங், மென்டோஸாவிடம் கிராஸ் செய்ய, அவர் அதை கோலாக்கினார். இதன்பிறகு கோல் எதுவும் விழாததால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x