Last Updated : 16 Mar, 2017 10:34 AM

 

Published : 16 Mar 2017 10:34 AM
Last Updated : 16 Mar 2017 10:34 AM

பிஎன்பி பரிபாஸ் டென்னிஸ் தொடர்: கால் இறுதியில் சானியா ஜோடி தோல்வி

பிஎன்பி பரிபாஸ் ஓபன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடர், ஸ்பெயின் ரபேல் நடால் ஆகியோர் 3-வது சுற்றில் வெற்றி பெற்றனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரும் 4-வது சுற்றில் தோல்வியடைந்தார். இரட்டையர் பிரிவு கால் இறுதியில் சானியா ஜோடி வெளியேறியது.

அமெரிக்காவின் கலிபோர்னி யாவில் உள்ள இந்தியன் வெல்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் 5-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் 6-3, 7-5 என்ற நேர் செட்டில் சகநாட்டை சேர்ந்த 26-ம் நிலை வீரரான பெர்னாண்டோ வெர்டஸ்கோவை வீழ்த்தினார்.

9-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் 7-6(7-3), 7-6(7-4) என்ற நேர் செட்டில் 24-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சனை தோற்கடித்தார். 4-வது சுற்றில் நடால்-பெடரர் பலப்பரீட்சை நடத்த உள்ளனர். 2-ம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச் 7-5, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவின் மார்ட்டின் டெல் போர்டோவை வீழ்த்தினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் 3-6, 3-6 என்ற நேர் செட்டில் 14-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் எலினா வெஸ்னினாவை தோற்கடித்தார். மற்ற ஆட்டங்களில் ஸ்பெயினின் கார்பைன் முகுருசா, டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி, அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோர் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினர்.

இரட்டையர் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, செக் குடியரசின் பார்பரா ஸ்டிரைகோவா ஜோடி 4-6, 4-6 என்ற நேர் செட்டில் சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ், தைவானின் யங் ஜன் ஷான் ஜோடியிடம் தோல்வியடைந்தது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x