Published : 20 Jan 2014 10:08 AM
Last Updated : 20 Jan 2014 10:08 AM

24 ரன்களில் தோற்றது இந்தியா: விராட் கோலி சதம் வீண்

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது இந்தியா. விராட் கோலி சதமடித்தபோதும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் இந்தியாவின் தோல்வி தவிர்க்க முடியாததானது.

நியூஸிலாந்தின் நேப்பியர் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த நியூஸிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜெஸ்ஸி ரைடர், புவனேஸ்வர் குமார் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே சிக்ஸர் அடித்து அதி ரடியைத் தொடங்கினார். எனினும் அவர் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. மேலும் 3 பவுண்டரிகளை விளாசிய ரைடர் 18 ரன் களில் சமி பந்துவீச்சில் போல்டு ஆனார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்டில் 23 பந்துகளைச் சந்தித்தபோதும் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

3-வது விக்கெட்டுக்கு 121

3-வது விக்கெட்டுக்கு கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஜோடி 121 ரன்கள் சேர்த்தது. 66 பந்துகளில் 7-வது அரைசதம் கண்ட வில்லியம்சன், 88 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய டெய்லர் 82 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 55 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு கேப்டன் பிரென்டன் மெக்கல்லமும், கோரே ஆண்டர்சனும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி அதிரடியாக விளையாடியது.

இஷாந்த் சர்மா வீசிய 40-வது ஓவரில் ஆண்டர்சன் ஒரு சிக்ஸர், அடிக்க மெக்கல்லம் இரு பவுண்டரிகளை விளாசினார். இதனால் 200 ரன்களைக் கடந்தது நியூஸிலாந்து. அந்த அணி 213 ரன்களை எட்டியபோது மெக்கல்லம் ஆட்டமிழந்தார். அவர் 25 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்தார்.

ஆண்டர்சன், ரோஞ்சி விளாசல்

இதையடுத்து ஆண்டர்சனுடன் இணைந்தார் லியூக் ரோஞ்சி. முகமது சமி வீசிய 44-வது ஓவரில் பவுண்டரி அடித்து லியூக் ரோஞ்சி அதிரடியைத் தொடங்க, அதே ஓவரில் ஆண்டர்சன் ஒரு சிக்ஸரையும், இரு பவுண்டரிகளையும் விளாசினார். ஜடேஜா வீசிய அடுத்த ஓவரை எதிர்கொண்ட ரோஞ்சி இரு சிக்ஸர்களையும், ஒரு பவுண் டரியையும் விளாச 44 மற்றும் 45-வது ஓவர்களில் மட்டும் 39 ரன்கள் கிடைத்தன.

ஆண்டர்சன் 30 பந்துகளில் அரை சதமடிக்க, மறுமுனையில் ரோஞ்சி 18 பந்து களில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த நாதன் மெக்கல்லம் 2 ரன்களில் ஆட்ட மிழக்க, நியூஸிலாந்து 50 ஓவர்களில் 7 விக் கெட் இழப்புக்கு 292 ரன்கள் குவித்தது. ஆண்டர்சன் 40 பந்துகளில் 4 சிக்ஸர், 3 பவுண் டரிகளுடன் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தியத் தரப்பில் முகமது சமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இஷாந்த் சர்மா 9 ஓவர்களில் 72 ரன்களையும், ஜடேஜா 9 ஓவர்களில் 61 ரன்களையும் வாரி வழங்கினர்.

ஏமாற்றிய ரோஹித்

293 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த இந்திய அணியில் ரோஹித் சர்மா வும், ஷிகர் தவணும் எச்சரிக்கையோடு விளையாடினர். இதனால் டிம் சௌதியின் முதல் இரு ஓவர்கள் மெய்டன் ஆனது. எனினும் ரோஹித் சர்மா நீண்டநேரம் நிலைக்கவில்லை. 23 பந்துகளைச் சந்தித்த அவர் 3 ரன்களோடு நடையைக் கட்டி னார். இதையடுத்து களம்புகுந்த கோலி, வந்த வேகத்தில் இந்தியாவின் முதல் பவுண்டரியை அடித்தார். இந்தியா 72 ரன்களை எட்டியபோது ஷிகர் தவண் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். முன்னதாக தவண் 15 ரன்களில் இருந்தபோது டிம் சௌதி பந்துவீச்சில் கொடுத்த கேட்ச்சை ஆண்டர்சன் கோட்டைவிட்டது குறிப்பிடத்தக்கது.

கோலி 18-வது சதம்

இதன்பிறகு வந்த ரஹானே 7 ரன்களில் ஆட்டமிழக்க, கோலியுடன் இணைந்தார் சுரேஷ் ரெய்னா. நாதன் மெக்கல்லம் வீசிய 26-வது ஓவரில் சிக்ஸர் அடித்த கோலி, அதே ஓவரில் (58 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகள்) அரைசதத்தை எட்டினார். இதனிடையே ரெய்னா 18 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் தோனி களம்புகுந்தார். 35-வது ஓவரில் இந்தியா, பேட்டிங் பவர் பிளே எடுக்க, அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட கோலி, மேலும் 4 பவுண்டரிகளை விளாசி 93 பந்துகளில் சதமடித்தார். இது ஒருநாள் போட்டியில் அவர் எடுத்த 18-வது சதமாகும். இதன்பிறகு தோனி இரு சிக்ஸர்களை விளாச, 40 ஓவர்களில் இந்தியா 210 ரன்களை எட்டியது. இதனால் கடைசி 10 ஓவர்களில் இந்தியாவின் வெற்றிக்கு 83 ரன்கள் தேவைப்பட்டன.

திருப்புமுனை

ஆனால் தோனி 40 ரன்களில் (46 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகள்) ஆட்டமிழந்தார். தோனி-கோலி ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 85 பந்துகளில் 95 ரன்கள் சேர்த்தது. பின்னர் வந்த ஜடேஜா ரன் ஏதுமின்றியும், மறுமுனையில் கோலி 123 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கோலி 111 பந்துகளில் 2 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் இந்த ரன்களை எடுத்தார். தோனி, ஜடேஜா, கோலி ஆகியோர் 11 பந்துகள் இடைவெளியில் ஆட்டமிழந்தது போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

பின்னர் வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்தியா 48.4 ஓவர்களில் 268 ரன்களுக்கு சுருண்டது. நியூஸிலாந்து தரப்பில் மெக்லீனா கான் 4 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன் இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பேட் டிங், பௌலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட ஆண்டர்சன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 2-வது போட்டி வரும் புதன்கிழமை ஹாமில்டனில் நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x