Published : 02 Jan 2014 12:17 PM
Last Updated : 02 Jan 2014 12:17 PM

சென்னை ஓபன்: நடப்பு சாம்பியன்களை வெளியேற்றிய போபண்ணா ஜோடி

இரட்டையர் பிரிவு நடப்பு சாம்பியன்களான ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா-பிரான்ஸின் பெனாய்ட் பேர் ஜோடி தங்களின் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது. செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் வாவ்ரிங்கா-பெனாய்ட் பேர் ஜோடி 4-6, 6-4, 9-11 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்தியாவின் ரோஹன் போபண்ணா-பாகிஸ்தானின் அய்ஸம் உல் ஹக் குரேஷி ஜோடியிடம் தோல்வி கண்டது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள போபண்ணா-குரேஷி ஜோடி சென்னை ஓபனில் வெற்றியோடு தொடங்கியிருப்பதோடு காலிறுதிக்கும் முன்னேறியது. போபண்ணா ஜோடி அடுத்த சுற்றில் இந்தியாவின் சாகேத் மைனேனி-கச்சனோவ் ஜோடியை சந்திக்கிறது.

சோம்தேவ் அவுட்

செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீரரும், சர்வதேச தரவரிசையில் 90-வது இடத்தில் இருப்பவருமான சோம்தேவ் 6-4, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் சகநாட்டவரும், தகுதிச்சுற்று வீரருமான ராம்குமார் ராமநாதனிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார். முதல்முறையாக சென்னை ஓபன் ஒற்றையர் பிரிவில் பங்கேற்றுள்ள ராம்குமார் தனது 2-வது சுற்றில் ஸ்பெயினின் மார்செலோ கிரானோலர்ஸை சந்திக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x