Last Updated : 09 Mar, 2017 01:06 PM

 

Published : 09 Mar 2017 01:06 PM
Last Updated : 09 Mar 2017 01:06 PM

முதல் சுற்றில் 0-4 என்று பின்தங்கிய பார்சிலோனா 6-1 அதிரடி வெற்றி மூலம் காலிறுதியில் நுழைவு

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணியை பார்சிலோனா அணி 6-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மொத்தமாக 6-5 என்ற கோல்களில் வென்று காலிறுதிக்குள் நுழைந்தது.

கேம்ப் நூவில் நடைபெற்ற இந்தப் போட்டிக்கு முன்பாக பார்சிலோனா அணி முந்தைய லெக்கில் 0-4 என்று இதே பி.எஸ்.ஜி. அணியிடம் தோல்வி அடைந்து காலிறுதி வாய்ப்பை இழக்கும் நிலையிலேயே இருந்தது.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து வரலாற்றில் முதல் லெக் ஆட்டத்தில் 0-4 என்று பின் தங்கியிருந்த எந்த அணியும் இப்படியொரு திருப்பத்தை ஏற்படுத்தி காலிறுதியில் நுழைந்ததில்லை, இந்த விதத்தில் நெய்மர், சுவாரேஸ், மெஸ்ஸி உள்ள பார்சிலோனா அணி வரலாறு படைத்தது என்றே கூற வேண்டும்.

பார்சிலோனா அணியின் ஆட்டத்தில் தீப்பொறி பறந்தது. 3-வது நிமிடத்தில் சுவாரேஸ் தலையால் முட்டி முதல் கோலை அடித்தார். பிறகு பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணியின் குர்ஸாவா தன் அணிக்கு எதிராகவே கோலை அடிக்க பார்சிலோனா 2-0 என்று மொத்தமாக 4-2 என்று முன்னிலையை குறைத்தது.

பிறகு 50-வது நிமிடத்தில் லயோனல் மெஸ்ஸி பெனால்டி மூலம் ஒரு கோலை அடிக்க மொத்தமாக 4-3 என்று இன்னமும் முன்னிலையை சமன் செய்ய முடியாமல் இருந்த நிலையில் 62-வது நிமிடத்தில் பி.எஸ்.ஜி. அணி வீரர் எடின்சன் கவானி மேலும் ஒரு கோலை அடிக்க 5-3 என்று பி.எஸ்.ஜி முன்னிலை தொடர்ந்தது.

இதனையடுத்து பார்சிலோனா அணி வெற்றி பெற மேலும் 3 கோல்கள் தேவை என்ற நிலையில் 88-வது நிமிடத்தில் நெய்மர் அசத்தலான ஃப்ரீ கிக்கில் ஒரு அபாரமான கோலை அடித்தார், பிறகு 91-வது நிமிடத்தில் நெய்மர் ஒரு பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார், இன்னும் தேவை ஒரு கோல் என்ற நிலையில் இறுதி விசில் ஊதப்படும் நிலையில் கடைசியில் பார்சிலோனா வீரர் ரொபர்ட்டோ வெற்றி கோலை அடிக்க இந்தப் போட்டியில் பார்சிலோனா 6-1 என்று வெற்றி பெற்று மொத்தமாக 6-5 என்ற கோல்களில் காலிறுதிக்குள் நுழைந்து வரலாறு படைத்தது.

பி.எஸ்.ஜி. அணி எப்படி தோற்றது என்பதை நம்பமுடியாமல் ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்ப, பார்சிலோனா அணி வீரர்கள் நம்பமுடியாத இந்த வெற்றியை தாறுமாறாகக் கொண்டாடத் தொடங்கினர்.

பி.எஸ்.ஜி அணியினர் தங்களது குறைபாடான தடுப்பாட்டத்தையும், 2-வது பாதியில் கோட்டை விட்ட கோல் வாய்ப்புகளையும் எண்ணி வருந்தியிருப்பார்கள்.

ஆட்டம் தொடங்கி 3-வது நிமிடத்திலேயே பி.எஸ்.ஜி அணியின் தடுப்பாட்டத்தில் குறைபாடு ஏற்பட்டதை சுவாரேஸ் அருமையாகப் பயன்படுத்தி தலையால் முதல் கோலை அடித்தார், அதன் பிறகும் பி.எஸ்.ஜி அணியினரை பார்சிலோனா அணி தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தின் மூலம் இவர்கள் பகுதியிலேயே தடுத்து நிறுத்தினர். இந்த நெருக்கடியில் நெய்மர் ஒரு ஷாட்டை வைடாக அடிக்க, சுவாரேஸ் ஷாட் ஒன்று கோல் கீப்பரால் தடுக்கப்பட்டது.

40-வது நிமிடத்தில் பி.எஸ்.ஜி அணி வீரர் தவறுதலாக பார்சிலோனாவுக்குச் சாதகமாக கோலை அடித்தார், இடைவேளைக்குப் பிறகு நெய்மரை ஃபவுல் செய்ய கிடைத்த பெனால்டி வாய்ப்பை மெஸ்ஸி கோலாக மாற்றினார். இதன் பிறகே பி.எஸ்.ஜி வீரர் கவானி ஒரு கோலை அடித்து டென்ஷனை அதிகப்படுத்தினார்.

அதன் பிறகுதான் நெய்மரின் அந்த அபார ஃப்ரீகிக் கோலாக மாற, சுவாரேஸை பி.எஸ்.ஜி. வீரர் மார்கின்ஹோஸ் ஃபவுல் செய்ய கிடைத்த பெனால்டியையும் நெய்மர் கோலாக மாற்றினார். இப்போது வரை கூட பி.எஸ்.ஜி. அணியே காலிறுதிக்குச் செல்லும் என்ற நிலையில் கடைசி கிக் என்று கருதப்படக்கூடிய ஒரு கிக்கை ரொபர்ட்டோ கோலாக மாற்றி மறக்க முடியாத ஒரு வெற்றியை பார்சிலோனாவுக்குப் பெற்றுத்தந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x