Published : 09 Jan 2014 10:35 AM
Last Updated : 09 Jan 2014 10:35 AM

நியூஸிலாந்தை பந்தாடியது மேற்கிந்தியத்தீவுகள்: 203 ரன்களில் அபார வெற்றி

நியூஸிலாந்துக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் 2-2 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

நியூஸிலாந்தின் ஹேமில்டன் நகரில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதையடுத்து மேற்கிந்தியத்தீவுகளின் பாவெல், சார்லஸ் ஆகியோர் ஆட்டத்தைத் தொடங்கினர். இந்த ஜோடி சிறப்பான தொடக்கத்தை அமைத் துக் கொடுத்தது. ஒருமுனையில் சார்லஸ் நிதானமாக விளையா டினார். மறுமுனையில் பாவெல் அதிரடியாக விளையாடி ரன் குவித்தார்.

பாவெல் 28 பந்துகளில் அரைசதம் கடந்தார். 12.1 ஓவர்களில் ஸ்கோர் 95 ஆக இருந்தபோது மேற்கிந்தியத்தீவுகள் முதல் விக்கெட்டை இழந்தது. அதிரடியாக விளையாடி வந்த பாவெல் மெக்கல்லம் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அவர் 48 பந்துகளை சந்தித்து 73 ரன்கள் எடுத்திருந்தார். இதில் 12 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடங்கும்.

அடுத்து சார்லஸுடன் எட்வர்ட்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியின் ஸ்கோரை 100 ரன்களுக்கு மேல் எடுத்துச் சென்றது. 18.3 ஓவர்களில் ஸ்கோர் 116 ஆக இருந்தபோது சார்லஸ் 31 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

ஒருமுனையில் எட்வர்ட்ஸ் நிலைத்து நின்று விளையாடத் தொடங்கினார். ஆனால் மறுமுனையில் சிம்மன்ஸ் 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். சிம்மன்ஸ் அவுட் ஆனபோது மேற்கிந்தியத்தீவுகள் 23.6 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.

எட்வர்ட்ஸ் - பிராவோ அபாரம்:

பின்னர் எட்வர்ட்ஸுடன் கேப்டன் டேயன் பிராவோ ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளை யாடி ரன்குவிக்கத் தொடங்கியது. நியூஸிலாந்தின் பந்து வீச்சாளர்கள் மாறி மாறி முயற்சித்தபோதும் எட்வர்ட்ஸ் – பிராவோ ஜோடியை பிரிக்கவும் முடிவில்லை. அவர்கள் ரன் குவிப்பதை கட்டுப்படுத்தவும் முடியவில்லை.

எட்வர்ட்ஸ் 62 பந்துகளில் அரைசதம் கடந்தார். பிராவோ 54 பந்துகளில் 50 ரன்களை எட்டினார். அரைசதம் அடித்த பின்பு விரைவாக ரன் சேர்க்கத் தொடங்கிய எட்வர்ட்ஸ் 90 பந்துகளில் சதம் அடித்தார். எட்வர்ட்ஸ், பிராவோவின் அதிரடி ஆட்டத்தால் 43.4 ஓவர்களில் மேற்கிந்தியத்தீவுகள் 300 ரன்களை எட்டியது.

பிராவோ 79 பந்துகளில் சதத்தை எட்டினார். 49 ஓவர்களில் 350 ரன்களை மேற்கிந்தியத்தீவுகள் கடந்தது. இந்த சூழ்நிலையில் எட்வர்ட்ஸ் – பிராவோ ஜோடி பிரிந்தது. 49 ஓவரின் கடைசி பந்தில் பிராவோ 106 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 81 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டரி, 3 சிக்ஸர்களை விளாசி இந்த ரன்களைச் சேர்த்தார்.

இதையடுத்து ரஸ்ஸல் களமிறங்கினார். இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 363 ரன்களை மேற்கிந்தியத்தீவுகள் எடுத்தது. எட்வர்ட்ஸ் 123 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இதில் 12 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும். ரஸ்ஸர் 6 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நியூஸிலாந்து தடுமாற்றம்:

364 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி நியூஸிலாந்து அடுத்து பேட்டிங்கை தொடங் கியது. குப்தில், ரைடர் ஆகியோர் ஆட்டத்தைத் தொடங்கினர். இருவரும் தொடக்கம் முதலே சற்று நிதானமாக விளையாடினர். எனினும் இந்த ஜோடி அதிக நேரம் நிலைக்கவில்லை. 4-வது ஓவரில் பிராவோ பந்தில் குப்தில் ஸ்டெம்புகளை பறிகொடுத்தார். அவர் 10 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

பின்னர் ரைடருடன், வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் நியூஸிலாந்து அணிக்கு நம்பிக்கை அளிக்க வில்லை. ரைடர் 17 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து ராஸ் டெய்லர் களமிறங்கினார். சிறிது நேரத்திலேயே வில்லியம்சன் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஒரு சில ஓவர்கள் இடை வெளியில் டெய்லர் 9 ரன்கள், கேப்டன் பிரன்டன் மெக்கல்லம் 6 ரன்கள் என விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இதனால் 14.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் என்ற மோசமான நிலையை நியூஸிலாந்து எட்டியது. இத்தொடரின் 3-வது போட்டியில் 36 பந்துகளில் சதமடித்து அதிவிரைவு சதம் என்ற உலக சாதனையைப் படைத்த கோரி ஆண்டர்சன் இந்த ஆட்டத்தில் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதையடுத்து நியூஸாந்து அணி தோல்வியை நோக்கி வேகமாகப் பயணித்தது.

பின் வரிசையில் விக்கெட் கீப்பர் ரோன்சி மட்டும் தாக்குப் பிடித்து விளையாடி 29 ரன்கள் எடுத்தார். நியூஸாந்து அணியில் ஒருவீரரின் அதிகபட்ச ஸ்கோரும் இதுவாகவே அமைந்தது. மேற்கிந்தியத்தீவு வீரர்களின் அபாரமான பந்து வீச்சாலி நியூலாந்து அணியின் இன்னிங்ஸ் 29.5 ஓவர்களில் முடிவுக்கு வந்தது. அந்த அணி 160 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் 203 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அபார வெற்றி பெற்றது.

மேற்கிந்தியத்தீவுகள் அணியில் மில்லர் 4 விக்கெட்களையும் ஹோல்டர், ரஸ்ஸர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். டேயன் பிராவோ ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இத்துடன் நியூஸிலாந்து – மேற்கிந்தியத்தீவுகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் முடிவுக்கு வந்துள்ளது. இத்தொடர் 2-2 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

முதல் ஒருநாள் ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது ஒருநாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. 3-வது ஒருநாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து 159 ரன்கள் வித்தியா சத்தில் வென்றது. 4-வது ஒருநாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 58 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இப்போது 5-வது ஒருநாள் ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் 203 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x