Published : 19 Mar 2014 11:16 AM
Last Updated : 19 Mar 2014 11:16 AM

டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு பீட்டர்சன் கேப்டன்

7-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் கேப்டனாகவும், தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக டெல்லி அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “7-வது ஐபிஎல் போட்டியில் புதுமுக வீரர்களுடன் களமிறங்கும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு பீட்டர்சன் கேப்டனாக இருப்பார். தினேஷ் கார்த்திக் துணை கேப்டனாக செயல்படுவார்” என்று குறிப்பிட்டுள்ளது.

2010-ல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து கோப்பையை வெல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்த பீட்டர்சன், தொடர்நாயகன் விருதையும் வென்றார். 2012-ல் டெல்லி அணியில் இணைந்த பீட்டர்சன் 8 போட்டிகளில் விளையாடி 305 ரன்கள் குவித்தார்.

காயம் காரணமாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் விளையாடாத பீட்டர்சனை, கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற ஏலத்தின்போது மேட்ச் கார்டை பயன்படுத்தி ரூ.9 கோடிக்கு வாங்கியது டெல்லி அணி.

கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது குறித்துப் பேசிய பீட்டர்சன், “டெல்லி அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பதை மிகப்பெரிய கௌரவமாகக் கருதுகிறேன். பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டனுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். இளம் வீரர்கள், அனுபவம் வாய்ந்த வீரர்கள், தலைசிறந்த பயிற்சியாளர் என அற்புதமான அணியைப் பெற்றிருக்கிறோம். இந்த சீசனில் எங்களின் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் மிகச்சிறப்பாக ஆடுவோம் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முதல் மூன்று ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக், இப்போது மீண்டும் டெல்லி அணிக்குத் திரும்பியுள்ளார். அவரை ரூ.12 கோடிக்கு வாங்கியிருக்கிறது டெல்லி அணி. 92 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடிள்ள தினேஷ் கார்த்திக் 1,741 ரன்கள் குவித்துள்ளார்.

துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கார்த்திக், “டெல்லி அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்படிருப்பது மிகப்பெரிய கௌரவமாகும். இது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்து துணை கேப்டன் பதவியை அளித்த அணி நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஜாம்பவான்களான கெவின் பீட்டர்சன், கேரி கிர்ஸ்டன் ஆகியோரின் கீழ் பணியாற்ற ஆர்வமுடன் உள்ளேன். டெல்லி அணி கோப்பையை வெல்வதற்காக சிறப்பாக ஆட முயற்சிப்பேன்” என்றார்.

டெல்லி அணியின் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் கூறுகையில், “பீட்டர்சன், தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரும் அணியின் மிக முக்கியமான வீரர்கள். பீட்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதால் 7-வது ஐபிஎல் போட்டியின் அனைத்து ஆட்டங்களிலும் பங்கேற்பார். அவர் சிறப்பாக விளையாடி தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x