Last Updated : 04 Oct, 2014 11:10 AM

 

Published : 04 Oct 2014 11:10 AM
Last Updated : 04 Oct 2014 11:10 AM

ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்தியாவுக்கு 11 தங்கம் உட்பட 57 பதக்கங்கள்

ஆசிய விளையாட்டுப் போட்டியின் 15-வது நாளான நேற்று நடைபெற்ற கபடிப் போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் இரு தங்கப் பதக்கங்களை வென்றன. இதன்மூலம் 11 தங்கம், 10 வெள்ளி, 36 வெண்கலம் என மொத்தம் 57 பதக்கங்களுடன் நிறைவு செய்தது இந்தியா.

கடைசி நாளான இன்று நடைபெறும் போட்டியில் இந்திய வீரர்கள் யாரும் பங்கேற்கவில்லை. கடந்த முறையைவிட இந்த முறை 8 பதக்கங்கள் குறைவாக பெற்றுள்ளது இந்தியா. சீனாவின் குவாங்ஜௌ நகரில் நடைபெற்ற கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 14 தங்கம், 17 வெள்ளி, 34 வெண்கலம் என மொத்தம் 65 பதக்கங்கள் வென்றது குறிப்பிடத்தக்கது.

தென் கொரியாவின் இன்சியான் நகரில் நேற்று நடைபெற்ற ஆடவர் கபடிப் போட்டியில் இந்தியா 27-25 என்ற புள்ளிகள் கணக்கில் ஈரானையும், மகளிர் கபடியில் இந்திய அணி 31-21 என்ற புள்ளிகள் கணக்கில் ஈரான் அணியையும் தோற்கடித்தன.

ஹாக்கியில் தங்கம்

நேற்று முன்தினம் நடைபெற்ற ஆடவர் ஹாக்கிப் போட்டியில் சர்தார் சிங் தலைமையிலான இந்திய அணி பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றதோடு, ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதிபெற்றது.

நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் 4x400 மீ. தொடர் ஓட்டத்தில் பிரியங்கா பன்வார், தின்டு லூக்கா, மன்தீப் கவுர், பூவம்மா ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. இந்திய வீராங்கனைகள் 3 நிமிடம், 28.68 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கத்தை தட்டிச் சென்றனர். தடகளத்தில் இந்தியாவுக்கு கிடைத்த 2-வது தங்கம் இது. இந்தப் பிரிவில் ஜப்பான் வெள்ளிப் பதக்கத்தையும், சீனா வெண்கலப் பதக்கத்தையும் தட்டிச் சென்றது.

மஞ்சு பாலாவுக்கு வெள்ளி

கடந்த 28-ம் தேதி நடைபெற்ற மகளிர் சங்கிலி குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை மஞ்சு பாலா வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அந்தப் பிரிவில் சீன வீராங்கனைகள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றிருந்தனர். அதில் ஒருவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மஞ்சு பாலாவின் வெண்கலப் பதக்கம் வெள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

இன்று நிறைவடைகிறது

ஆசிய விளையாட்டுப் போட்டி இன்றோடு நிறைவடைகிறது. போட்டி யின் நிறைவு விழா நிகழ்ச்சி இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. 3 மணி நேரம் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் பாப் பாடகர் பி.எஸ்.ஒய்., கொரிய நடன நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கலக்கவுள்ளனர். டென் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x