Published : 12 Apr 2017 10:03 AM
Last Updated : 12 Apr 2017 10:03 AM
டேவிஸ் கோப்பை டென்னிஸில் உலக குரூப் பிளே ஆப் சுற்றில் இந்தியா, கனடாவுடன் வரும் செப்டம்பர் மாதம் மோதுகிறது. இந்த ஆட்டம் கனடாவில் செப்டம்பர் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது.
டேவிஸ் கோப்பை வரலாற்றில் இந்தியா-கனடா அணிகள் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதன்முறை. இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தானை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி உலக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது. அதேவேளையில் கனடா உலக குரூப் முதல் சுற்றில் 2-3 என்ற கணக்கில் கடந்த வாரம் இங்கிலாந்திடம் தோல்வி கண்டிருந்தது.
கனடா அணிக்கு எதிரான ஆட்டம் குறித்து இந்திய அணியின் நான் பிளேயிங் கேப்டன் மகேஷ் பூபதி கூறும்போது, "கனடா அணியில் முன்னணி வீரர்கள் பலர் உள்ளனர். இதனால் இந்திய வீரர்களுக்கு இந்த ஆட்டம் சவாலாக இருக்கும்" என்றார்.
கனடா அணியில் உலகத் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள மிலோஸ் ரயோனிச் உள்ளார். 2016-ம் ஆண்டு விம்பிள்டனில் 2-வது இடம் பிடித்த அவர், இங்கிலாந்துக்கு எதிராக கடந்த வாரம் நடைபெற்ற டேவிஸ் கோப்பை ஆட்டத்தில் காயம் காரணமாக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. -
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT