Published : 03 Oct 2014 10:53 AM
Last Updated : 03 Oct 2014 10:53 AM

ஆசிய போட்டி கபடி: 7-வது முறையாக தங்கம் வென்று இந்திய ஆடவர் அணி சாதனை

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான கபடிப் போட்டியிலும் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கபடி அறிமுகப்படுத்தப்பட்டது முதலே இந்திய ஆடவர் அணி தொடர்ச்சியாக சாம்பியனாக வலம் வருவது கவனிக்கத்தக்கது.

இறுதிப் போட்டியில் இரான் அணியை 27-25 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா வெற்றி கண்டுள்ளது. ஆசிய விளையாட்டு கபடிப் போட்டியில் இந்திய ஆண்கள் அணி தங்கம் வெல்வது இது 7-வது முறையாகும்.

6-வது இடத்துக்கு முன்னேற்றம்:

ஆசிய விளையாட்டு கபடிப் போட்டியில் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவிலும் தங்கம் வென்றதன் மூலம் பதக்கப் பட்டியலில் இந்தியா 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. தற்போது, இந்தியா 11-தங்கம், 9-வெள்ளி, 37-வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ளது.

17-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் தென் கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை நடந்த ஆண்களுக்கான கபடி இறுதிப் போட்டியில் இந்தியா - இரான் அணிகள் மோதின. இந்திய அணி 27-25 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

முன்னதாக, வெள்ளிக்கிழமை காலை, இந்திய மகளிர் அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக கபடி விளையாட்டில் தங்கப் பதக்கத்தை தக்க வைத்துக் கொண்டது என்பது கவனிக்கத்தக்கது. | படிக்க:>ஆசிய போட்டி கபடி: இந்திய மகளிர் அணிக்கு தங்கம்

7-வது முறையாக சாம்பியன்:

ஆசிய விளையாட்டுப் போட்டியில், 1990-ல் முதன் முறையாக ஆண்களுக்கான கபடிப் போட்டி சேர்க்கப்பட்டது. அப்போது முதல் இந்தியா தொடர்ந்து சாம்பியன் பட்டம் வென்று வருகிறது. 2010-ல் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் இந்தியாவுக்கு இரான் நிகரான சவால் விடுத்தது.

இந்நிலையில், இன்றைய போட்டியிலும் இரான் வீரர்கள் அசாத்தியமாக விளையாடினர். ஆட்டத்தின் துவக்கத்தில் 10 புள்ளிகள் முன்னிலையில் இருந்தனர். பின்னர் இந்திய வீரர்கள் இரான் வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். ஆட்டத்தின் 37-வது நிமிடத்தில் இந்திய வீரர்கள் பதக்க வாய்ப்பை தங்கள் வசப்படுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x