Last Updated : 21 Oct, 2014 03:53 PM

 

Published : 21 Oct 2014 03:53 PM
Last Updated : 21 Oct 2014 03:53 PM

மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடர்களை ரத்து செய்து பிசிசிஐ அதிரடி

இந்தியத் தொடரை பாதியிலேயே கைவிட்டுச் சென்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான அனைத்து இருதரப்பு தொடர்களையும் பிசிசிஐ ரத்து செய்தது. மேலும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் தொடரை ரத்து செய்ததால் பிசிசிஐ-க்கு ஏகப்பட்ட இழப்பு ஏற்பட்டதாக பிசிசிஐ செயலர் சஞ்சய் படேல் அன்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பிசிசிஐ செயற்குழுக் கூட்டம் அவசரமாக இன்று கூட்டப்பட்டது. இதில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இனி நடைபெறுவதாக இருந்த அனைத்து இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளையும் பிசிசிஐ ரத்து செய்தது. மேலும் இழப்பீடு கோர சட்டத்தை அணுகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சஞ்சய் படேல் கூறும்போது, “தொடரை பாதியிலேயே கைவிட்டதால் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருக்கிறது. மேலும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இருதரப்பு கிரிக்கெட் தொடர்கள் அனைத்தும் இடைக்கால ரத்து செய்யப்படுகிறது.

மேலும், பிசிசிஐ-யின் அழைப்பை ஏற்றுக் கொண்ட இலங்கை கிரிக்கெட் வாரியத்தைச் செயற்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக பாராட்டுகிறோம். இலங்கை இந்த அவசரத் தொடருக்கு ஒப்புக் கொண்டதால் அடுத்த ஆண்டு ஜூலை/ஆகஸ்ட் மாதத்தில் இந்திய அணி இலங்கையில் கிரிக்கெட் தொடர் ஒன்றில் பங்கேற்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் பாதியிலேயே சென்றதால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான இழப்பீட்டை அவர்களிடமிருந்து கோருவோம், மேலும் ஐசிசி-யிடம் இந்த விவகாரம் எடுத்துச் செல்லப்படும்” என்றார்.

மேற்கிந்திய கிரிக்கெட் வாரியமும், மேற்கிந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கமும் செய்து கொண்ட புதிய ஒப்பந்தத்தின் படி வீரர்கள் ஊதியத்தில் 75% குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தே மேற்கிந்திய வீரர்கள் தொடரிலிருந்து விலகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x