Published : 20 Dec 2013 12:00 AM
Last Updated : 20 Dec 2013 12:00 AM

சுஷில் குமார், யோகேஷ்வர் தத் பங்கேற்ற பிரிவுகள் ஒலிம்பிக் நீக்கம்: மல்யுத்த வீரர்களுக்கு சிக்கல்

இந்திய மல்யுத்த வீரர்கள் சுஷில் குமார் (66 கிலோ எடைப்பிரிவு), யோகேஷ்வர் தத் (60 கிலோ எடைப்பிரிவு) ஆகியோர் ஒலிம்பிக் பதக்கம் வென்ற எடைப்பிரிவு போட்டிகள் 2016-ல் ரியோடி ஜெனிரோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் நடைபெறும் மல்யுத்தப் போட்டிகளுக்கான எடைப்பிரிவுகளில் உலக மல்யுத்த அமைப்பு பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. அதில் 66 மற்றும் 60 கிலோ எடைப் பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன. எனவே 2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் சுஷில் குமார், யோகேஷ்வர் தத் ஆகியோர் இந்த எடைப்பிரிவுகளில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சுஷில் குமார் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றார். 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதேபோல யோகேஷ்வர் தத் லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

சர்வதேச மல்யுத்த அமைப்பின் இந்த முடிவு தொடர்பாக அதிர்ச்சி தெரிவித்துள்ள சுஷில் குமார், அடுத்து என்ன செய்வது என்பது தெரியவில்லை. எங்கள் பயிற்சியாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்குவோம். இப்பிரச்னையில் இருந்து மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த எடைப்பிரிவு மாற்றங்கள் இந்திய வீரர்களை மட்டுமல்லாது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மல்யுத்த வீரர்களையும் பாதிக்கும். 60 மற்றும் 66 கிலோ எடைப்பிரிவுகளில் பங்கேற்கும்போதுதான் எங்களுக்கு ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று கூறினார்.

2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்காக இப்போதிருந்தே தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். இந்த சூழ்நிலையில் எடைப்பிரிவில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் இப்போது 60 கிலோவில் உள்ள நான், 57 கிலோ எடைப் பிரிவுக்கு செல்லாமல், 65 கிலோ எடைப்பிரிவுக்கு சென்றுவிடலாம் என்று முதல் கட்டமாக யோசித்துள்ளேன். எனது உயரத்துக்கு அதுவே சரியாக இருக்கும் என்று யோகேஷ்வர் தத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x