Published : 10 Nov 2013 11:08 AM
Last Updated : 10 Nov 2013 11:08 AM

கொல்கத்தா டெஸ்ட்: அறிமுக வீரர்கள் ரோஹித், ஷமி சாதனை

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கொல்கத்தா டெஸ்ட்டில், அறிமுக வீரர்களான ரோஹித் சர்மா, முகமது ஷமி ஆகியோர் சாதனை படைத்துள்ளனர்.

இந்தப் போட்டியில் 118 ரன்களைக் கொடுத்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அறிமுகப் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியர்கள் வரிசையில் 2-வது இடத்தைப் பிடித்தார் ஷமி. 1988-ல் சென்னையில் நடைபெற்ற டெஸ்டில் நரேந்திர ஹிர்வானி 136 ரன்களைக் கொடுத்து 16 விக்கெட்டுகளை வீழ்த்தியே அறிமுகப் போட்டியில் இந்தியர் ஒருவர் எடுத்த அதிகபட்ச விக்கெட் சாதனையாகும்.

ரோஹித் சர்மா 177 ரன்கள் குவித்ததன் மூலம் அறிமுகப் போட்டியில் 150 ரன்கள் குவித்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். முதல் வீரர் ஷிகர் தவண் (187) ஆவார்.

இந்திய அணி தொடர்ச்சியாக 5-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ரோஹித்-அஸ்வின் ஜோடி 280 ரன்கள் குவித்தது. இது டெஸ்ட் போட்டியில் ஒரு ஜோடி 7-வது விக்கெட்டுக்கு எடுத்த 3-வது அதிகபட்ச ரன்னாகும். இந்திய ஜோடி ஒன்று 7-வது விக்கெட்டுக்கு எடுத்த அதிகபட்ச ரன்னாகும். முன்னதாக வி.வி.எஸ்.லட்சுமண்-தோனி ஜோடி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 259 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது.

கொல்கத்தாவில் இந்தியாவும் மேற்கிந்தியத் தீவுகளும் 10 போட்டிகளில் மோதியுள்ளன. இரு அணிகளும் தலா 3 வெற்றிகளை சுவைத்துள்ளன. தோனி தலைமையில் இந்தியா 25-வது டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்தது. இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு அதிக வெற்றியைத் தேடித்தந்த கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றார்.

அறிமுகப் போட்டியில் ஓர் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 3-வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி. அறிமுகப் போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற 5-வது இந்தியர் ரோஹித் சர்மா.

சச்சினுக்கு ஓவியத்தை பரிசளித்த மம்தா!

ஈடன் கார்டனில் 199-வது டெஸ்ட் போட்டியை விளையாடிய லிட்டில் மாஸ்டர் சச்சினுக்கு தான் வரைந்த ஓவியத்தை பரிசாக அளித்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. இதேபோல் தலைப்பாகை ஒன்றையும் சச்சினுக்கு அணிவித்தார் மம்தா பானர்ஜி. கொல்கத்தா போலீஸ் ஆணையர் சுரஜித் கர், துர்கா சிலை ஒன்றை பரிசாக அளித்தார்.

மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜக்மோகன் டால்மியா, ஆலமர சிலை ஒன்றை சச்சினுக்கு பரிசாக அளித்தார். அதில் சச்சினின் 199-வது டெஸ்ட் போட்டியைக் குறிக்கும் வகையில் 199 தங்க இலைகளும், ஒரு தங்க நாணயமும் உள்ளன. போட்டியின் 5-வது நாளில் விமானம் மூலம் 199 கிலோ ரோஜாக்கள் தூவப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் போட்டி 3-வது நாளிலேயே முடிந்ததால், அது ரத்து செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x