Published : 28 Oct 2014 03:25 PM
Last Updated : 28 Oct 2014 03:25 PM

திராவிட் பாணியில் ஆஸி. வீரர்களுக்கு டீன் ஜோன்ஸ் அறிவுரை

பாகிஸ்தானுக்கு எதிராக சுழற்பந்து வீச்சில் படுதோல்வியடைந்த ஆஸ்திரேலியா மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளது. இந்நிலையில் ராகுல் திராவிட், கெவின் பீட்டர்சனுக்கு அளித்த அறிவுரையை எதிரொலித்து டீன் ஜோன்ஸ் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஸ்பின் பந்துகளை எதிர்கொள்ள ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதாவது முதலில் வலைப்பயிற்சியில் ஸ்பின் பந்துகளை எதிர்கொள்ளும் போது கால்காப்பு அணியாமல் பயிற்சி எடுத்துக் கொள்ளவேண்டும் என்கிறார் டீன் ஜோன்ஸ்.

இதே அறிவுரையைத்தான் ராகுல் திராவிட் தனது மின்னஞ்சலில் கெவின் பீட்டர்சனிடம் தெரிவித்தார்: “கால்காப்பு அணியாமல் விளையாடும் போது, காலுக்கு முன்னால் பேட்டைக் கொண்டு வந்து ஆட அதிகம் முயற்சி செய்வோம். மேலும் பந்தை கவனமாக கடைசி வரை பார்க்கவும் செய்வோம். எனது பயிற்சியாளர் எனக்கு அப்படித்தான் ஸ்பின்னை எதிர்கொள்ளச் செய்தார்” என்று திராவிட் கூறியிருந்தார்.

இப்போது டீன் ஜோன்ஸ் அதையே ஆஸ்திரேலிய வீரர்களுக்குக் கூறியுள்ளார்: "டேரன் லீ மேன் இடத்தில் நான் இருந்தால், வலையில் கால்காப்பு அணியாமல் ஸ்பின் பந்தை எதிர்கொள்ளச் செய்வேன். தொடைகளுக்கான காப்பு வைத்துக் கொள்ளலாம்.

நாமெல்லாம் என்ன செய்கிறோம் என்றால் ஸ்பின் பந்தை ஆடும்போது முதலில் காலைத் தூக்கி போடுகிறோம் பிறகு கையைக் கொண்டு வருகிறோம். இந்திய வீரர்கள்தான் ஸ்பின்னை விளையாடுவதில் சிறந்த வீரர்கள், அவர்கள் காலை பந்தின் திசைக்கு கொண்டு வர மாட்டார்கள் மட்டை முதலில் பந்தின் மீது இறங்கும். பேடை அதிகம் பயன்படுத்த மாட்டார்கள்.

நாம் இங்கிலாந்து வீர்ர்கள் போல் பேட், கால்காப்பு இரண்டையும் நெருக்கமாக வைத்து விளையாடுகிறோம். இது நம் ஊரில் பவுன்ஸ் ஆகும் பிட்ச்களுக்கு சரி, ஆனால் துணைக் கண்டங்களில் பவுன்ஸ் ஆகாது. அங்கு காலை முன்னே நீட்டி பந்தைக் கோட்டை விட்டால் எல்.பி. ஆவது உறுதி.

துபாய் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் நேர் பந்துகளில் ஆட்டமிழந்தார்கள். 75% விக்கெட்டுகள் ஸ்பின்னில் விழுந்துள்ளன.

நிறைய பயிற்சி செய்கின்றனர், ஆனால் அடிப்படை பிரச்சினை என்னவென்பதை இன்னமும் கண்டுபிடிக்கவில்லை.” என்கிறார் டீன் ஜோன்ஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x