Published : 26 Sep 2016 03:10 PM
Last Updated : 26 Sep 2016 03:10 PM

இந்திய கனவு டெஸ்ட் அணி முடிவுகள்: தோனி கேப்டன், திராவிட்டுக்கு ரசிகர்கள் பேராதரவு

ரசிகர்கள் வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்யப்பட்ட அனைத்து கால சிறந்த இந்திய அணிக்கு கேப்டனும், விக்கெட் கீப்பருமாக தோனி திகழ்கிறார்.

இந்திய அணியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க 500-வது டெஸ்ட் போட்டியை முன்னிட்டு அனைத்து கால சிறந்த அணிக்கான ரசிகர்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது, இந்த கனவு அணிக்கு தோனி கேப்டன் மற்றும் விக்கெட் கிப்பராவார்.

தொடக்க வீரர்களாக சுனில் கவாஸ்கர், விரேந்திர சேவாக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கவாஸ்கருக்கு 68% வாக்குகளும், சேவாகிற்கு 86% வாக்குகளும் விழுந்தன.

3-ம் நிலையில் களமிறங்க ஏறத்தாழ ஏகமனதாக ராகுல் திராவிட் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றே கூற வேண்டும். 96% வாக்குகள் ராகுல் திராவிடிற்கு கிடைத்தது. 4-ம் நிலையில் சச்சின் டெண்டுல்கர் 68% வாக்குகள் பெற்றார்.

லஷ்மண் 5-ம் நிலைக்காக 58% வாக்குகள் பெற்றார். இவருக்கும் கங்குலிக்கும் கடும் போட்டி நிலவினாலும் கங்குலி 38% வாக்குகளையே பெற்றார். அடுத்ததாக ஆல்ரவுண்டர் நிலைக்கு கபில்தேவ் 91% வாக்குகளுடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அடுத்தபடியாக 90% வாக்குகளுடன் கேப்டனாகவும் விக்கெட் கீப்பராகவும் தோனி திகழ்கிறார். நம்பர் 8-ற்கு அஸ்வின் 53% வாக்குகள் பெற்றார். 92% வாக்குகளுடன் அனில் கும்ப்ளே 9-ம் இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். அடுத்த இடத்திற்கான தேர்வில் ஜவகல் ஸ்ரீநாத் 78% வாக்குகள் பெற்றார்.

ஸ்ரீநாத்துக்கு அடுத்த படியாக ஜாகீர் கான் 83% வாக்குகள் பெற்றார்.

12-வது நபருக்கான தேர்வில் ரசிகர்கள் யுவராஜ் சிங்கிற்கு 62% வாக்குகள் அளித்தனர்.

ரசிகர்களின் கனவு அணி: சுனில் கவாஸ்கர், சேவாக், ராகுல் திராவிட், சச்சின், லஷ்மன், கபில்தேவ், தோனி, அஸ்வின், கும்ப்ளே, ஸ்ரீநாத், ஜாகீர் கான், யுவராஜ் சிங் (12வது வீரர்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x