Published : 01 Nov 2013 10:02 AM
Last Updated : 01 Nov 2013 10:02 AM

ஏடிபி உலக டூர் பைனல்ஸ்: 12-வது முறையாக பங்கேற்கும் ஃபெடரர்

லண்டனில் வரும் 4-ம் தேதி தொடங்கவுள்ள ஏடிபி உலக டூர் பைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் விளையாடும் வாய்ப்பை ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் உறுதி செய்தார். இதில் தொடர்ந்து 12-வது முறையாக விளையாடவுள்ளார் ஃபெடரர்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் 3-வது சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் ஏடிபி உலக டூர் பைனல்ஸுக்கு ஃபெடரர் தகுதி பெற்றார்.

புதன்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் ஃபெடரர் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை தோற்கடித்தார்.

ஏடிபி உலக டூர் பைனல்ஸ் போட்டியில் சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.

உலகின் 4-ம் நிலை வீரரான பிரிட்டனின் ஆன்டி முர்ரே காயம் காரணமாக உலக டூர் பைனல்ஸில் இருந்து விலகிவிட்டதால், 9-வது இடத்தைப் பிடிக்கும் வீரரும் அதில் விளையாடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள ஃபெடரர், பாரீஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் 3-வது சுற்றுக்கு முன்னேறியிருப்பதன் மூலம் புதிய ஏடிபி தரவரிசை வெளியாகும்போது, முதல் 9 இடங்களுக்குள்ளேயே இருப்பார். அதனால் அவர் ஏடிபி உலக டூர் பைனல்ஸில் விளையாடும் வாய்ப்பு உறுதியாகியுள்ளது.

இதன்மூலம் தொடர்ந்து 12-வது முறையாக ஏடிபி உலக டூர் பைனல்ஸில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ள ஃபெடரர், அந்தப் போட்டி தொடரில் அதிக முறை பங்கேற்றவர் என்ற சாதனையை இவான் லென்டலுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x