Published : 07 Feb 2014 10:38 AM
Last Updated : 07 Feb 2014 10:38 AM

பிசிசிஐ-க்கு எதிராக பாகிஸ்தானுடன் கைகோக்கிறது இலங்கை

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நிர்வாகத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கொண்டு வரும் மாற்றத்துக்கு இலங்கை நேற்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் பிசிசிஐ-யை எதிர்ப்பதில் பாகிஸ்தானுடன் இலங்கை கைகோத்துள்ளது.

ஐசிசி நிர்வாக முறை மற்றும் வருவாய் பகிர்வு முறையில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இதில் பிசிசிஐ பல பரிந்துரைகளை அளித்திருந்தது. முக்கியமாக வருவாய் பகிர்வு பிசிசிஐ-க்கு பெருமளவில் கிடைக்க வழி செய்யப்பட்டது.

இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடகத்தில் இருந்தே எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. பிசிசிஐ-க்கு எதிராக பிறநாட்டு கிரிக்கெட் வாரியங்களின் ஆதரவைத் திரட்டும் வேலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஈடுபட்டுள்ளது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்கள் பிசிசிஐ-க்கு ஏற்கனவே ஆதரவு தெரிவித்துவிட்டன.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஐசிசி தொடர்பான பிசிசிஐ-யின் திட்டத்தை நிராகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டை நிர்வகிக்கும் விஷயத்தில் ஒரு நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் ஆதிக்கத்தை அனுமதிக்க முடியாது என்றும், போர் குற்றங்கள் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை எதிர்த்து இலங்கை அரசு போரிடுவதைப் போல, இலங்கை கிரிக்கெட் வாரியமும் இந்த விஷயத்தில் சர்வதேச நெருக்குதல்களை எதிர்த்துப் போரிட வேண்டும் என்று சில உறுப்பினர்கள் காரசாரமாகப் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு சில நாடுகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவது கிரிக்கெட்டை சீரழித்து விடும். அவர்கள் தங்களுக்கு சாதமாக கிரிக்கெட் விதிகளை மாற்றுவார்கள். இதற்கு ஏற்கெனவே பல முன்னுதாரணங்கள் உள்ளன. பவுன்சர் தொடர்பான விதியை இங்கிலாந்தும், ஆஸ்திரேலி யாவும் இணைந்து கொண்டு வந்து மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட்டை நசுக்கினார்கள். சமீபத்தில் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் டிஆர்எஸ் முடிவை இந்திய கிரிக்கெட் வாரியம் தலையிட்டு நிறுத்தி விட்டது என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் சார்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x