Published : 16 Oct 2013 03:13 PM
Last Updated : 16 Oct 2013 03:13 PM

சொந்த ஊரில் விடைபெறுகிறார் சச்சின்

மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரின் 200-வது டெஸ்ட் போட்டி அவருடைய சொந்த ஊரான மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நவம்பர் 14 முதல் 18 வரை நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

200-வது டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் சச்சின், தனது கடைசி டெஸ்ட் போட்டியை சொந்த ஊர் ரசிகர்கள் முன்னிலையில் விளையாட விருப்பம் தெரிவித்ததன் பேரில், அந்தப் போட்டியை மும்பையில் நடத்த பிசிசிஐ ஒப்புக்கொண்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. அந்தப் போட்டிகள் நடைபெறும் மைதானங்களை பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தலைமையிலான குழுவினர் மும்பையில் செவ்வாய்க்கிழமை கூடி இறுதி செய்தனர்.

அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ராஜீவ் சுக்லா கூறுகையில், “தனது 200-வது டெஸ்ட் போட்டியை மும்பையில் நடத்தினால், எனது தாயாரும் அந்தப் போட்டியை நேரில் வந்து பார்க்க முடியும் என சச்சின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அவருடைய உணர்வுக்கு மதிப்பளித்து இந்திய-மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடத்தப்படுகிறது” என்றார்.

போட்டிகள் நடத்தும் வாய்ப்பு சுழற்சி முறையில் பல்வேறு மைதானங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த முறை மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரு டெஸ்ட் போட்டிகளும் பெங்களூர் மற்றும் அஹமதாபாத் நகரங்களில் நடத்தப்பட வேண்டும். ஆனால் சச்சின் ஓய்வு பெறவுள்ள நிலையில், இந்த இரு போட்டிகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதனால் முதல் போட்டி இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான கொல்கத்தா ஈடன் கார்டனிலும், 2-வது போட்டி மும்பை வான்கடேவிலும் நடத்தப்படுகிறது.

அது குறித்துப் பேசிய ராஜீவ் சுக்லா, “இரு போட்டிகளும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால், போட்டியை நடத்த பெரிய மைதானம் தேவைப்பட்டது. அதன் அடிப்படையில்தான் முதல் டெஸ்ட் போட்டியை நடத்தும் வாய்ப்பு கொல்கத்தாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

முதல் ஒருநாள் போட்டி கொச்சியிலும், 2-வது போட்டி விசாகப்பட்டினத்திலும் நடைபெறுகிறது. 3-வது ஒருநாள் போட்டியை கான்பூர் அல்லது பரோடாவில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. கான்பூர் மைதானத்தை பிசிசிஐ தொழில்நுட்பக் குழு விரைவில் ஆய்வு செய்துள்ளது. 3-வது போட்டி கான்பூரிலா அல்லது பரோடாவிலா என்பது குறித்து இன்னும் ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும்” என்றார்.

சச்சினுக்கு பிரமாண்டமான முறையில் வழியனுப்பு விழா நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகக் கூறிய சுக்லா, “அது தொடர்பாக நாங்கள் ஆலோசனை நடத்தவுள்ளோம். அவருடைய 200-வது டெஸ்ட் போட்டி நவம்பர் 14-ல் தான் ஆரம்பமாகிறது. எனவே சச்சினின் வழியனுப்பு விழா குறித்து சிந்திக்க போதுமான கால அவகாசம் உள்ளது. அதுகுறித்து பிசிசிஐ செயற்குழு முடிவெடுக்கும்” என்றார்.

தென் ஆப்பிரிக்கத் தொடர் குறித்துப் பேசிய சுக்லா, “இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இரு நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர்களும் இப்போதும் பேசி வருகிறார்கள். தென் ஆப்பிரிக்க தொடர் குறித்து மைதான தேர்வு கூட்டத்தின்போது எதுவும் விவாதிக்கப்படவில்லை என்றார்.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையில் 3 டெஸ்ட், 7 ஒருநாள் போட்டி, இரு டி20 போட்டிகள் நடைபெறும் என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் ஆலோசிக்காமலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டது. இதனால் கோபமடைந்த பிசிசிஐ, அந்தத் தொடர் குறித்து இறுதி முடிவெடுக்காமல் தற்போது வரை இழுத்தடித்து வருகிறது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி வரும் 28-ம் தேதி இந்தியா வருகிறது. அக்டோபர் 31 முதல் நவம்பர் 2-ம் தேதி வரை உத்தரப் பிரதேச கிரிக்கெட் சங்க அணியுடன் 3 நாள் பயிற்சிப் போட்டியில் விளையாடுகிறது. இது ஒடிசா மாநிலம் கட்டக்கில் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து டெஸ்ட் தொடர் ஆரம்பமாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x