Published : 29 Nov 2013 12:00 AM
Last Updated : 29 Nov 2013 12:00 AM

19 வயதுக்கு உள்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் - இந்திய அணிக்கு விஜய் சூல் கேப்டன்

19 வயதுக்குள்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக் கான இந்திய அணி கேப்டனாக விஜய் சூல் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பேட்ஸ்மேனான விஜய், 2012-ம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்கு உள்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் துணை கேப்டனாக இருந்தார்.

இப்போது அவர் கேப்டனாகி யுள்ளார். கேரளத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் சஞ்சு விஸ்வநாத் துணை கேப்டனாகியுள்ளார்.

இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிசம்பர் 28-ம் தேதி தொடங்குகிறது.

இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) துணைச் செயலாளர் அனுராக் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூனியர் வீரர் களைத் தேர்வு செய்வதற்கான அகில இந்திய தேர்வுக்குழு கூட்டம் டெல்லியில் நவம்பர்

27-ம் தேதி நடைபெற்றது. இதில் 19 வயதுக்குள்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் அணிக்கான இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

2011-ம் ஆண்டு தேசிய அளவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் விஜய் சூல் 451 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 6 போட்டிகளில் பங்கேற்று 151 ரன்கள் எடுத்தார்.

ஆசியகோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரசு எமிரெட், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், மலேசியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன. டிசம்பர் 28-ம் தேதி இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரெட்டை எதிர்கொள்கிறது.

டிசம்பர் 31-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x