Published : 25 Dec 2013 09:40 AM
Last Updated : 25 Dec 2013 09:40 AM

பிப்.12-ல் ஐபிஎல் வீரர்கள் ஏலம் - ஒவ்வொரு அணியும் 5 பேரைத் தக்கவைக்கலாம்

7-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் வரும் பிப்ரவரி 12-ம் தேதி நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு அணியும் கடந்த சீசனில் தங்கள் அணிக்காக விளையாடிய 5 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஐபிஎல் ஆட்சிமன்றக் குழுவில் நடத்தப்பட்ட பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு வீரர்கள் ஒப்பந்தத்தில் புதிய முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 7-வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 12-ம் தேதி நடைபெறும்.

தேவைப்பட்டால் பிப்ரவரி 13-ம் தேதியும் ஏலம் நடைபெறும். ஏலம் நடைபெறும் இடம் விரைவில் அறிவிக்கப்படும்.

ஒவ்வொரு அணியும் கடந்த சீசனில் தங்கள் அணிக்காக விளையாடிய 5 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம். அவர்களில் 4 பேருக்கு மேல் இந்திய அணிக்காக விளையாடுபவர்களாக இருக்கக்கூடாது.

5 வீரர்களை தக்கவைக்கும் பட்சத்தில் முதல் வீரருக்கு ரூ.12.5 கோடியும், 2-வது வீரருக்கு ரூ.9.5 கோடியும், 3-வது வீரருக்கு ரூ.7.5 கோடியும், 4-வது வீரருக்கு ரூ.5.5 கோடியும், 5-வது வீரருக்கு ரூ.4 கோடியும் விலையாக நிர்ணயிக்கலாம். அணி நிர்வாகத்தால் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் தவிர மற்ற அனைவரும் ஏலத்தில் பங்கேற்பார்கள்.

“மேட்ச் கார்டு” என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக சென்னை அணிக்காக கடந்த சீசனில் விளையாடிய ரெய்னாவை அந்த அணி தக்கவைத்துக் கொள்ளாதபட்சத்தில் அவர் ஏலம் விடப்படுவார். அதில் மும்பை அணி ரெய்னாவை அதிகபட்ச தொகைக்கு ஏலத்தில் எடுக்கும்போது, அவரை சென்னை அணி விட்டுக்கொடுக்க விரும்பாவிட்டால் “மேட்ச் கார்டை” பயன்படுத்தி மும்பை அணி கேட்டதொகைக்கு ரெய்னாவை வாங்கலாம்.

ஒவ்வொரு அணியும் எத்தனை வீரரை தக்கவைத்துக் கொள்கிறது என்பதைப் பொறுத்தே அவர்களுக்கு வழங்கப்படும் “மேட்ச் கார்டு”களின் எண்ணிக்கை அமையும். 3 முதல் 5 வீரர்களை தக்கவைக்கும் அணிகளுக்கு ஒரு “மேட்ச் கார்டு” மட்டுமே வழங்கப்படும்.

ஒன்று முதல் இரண்டு வீரர்களைத் தக்கவைக்கும் அணிக்கு இரு “மேட்ச் கார்டு”களும், ஒரு வீரரைக்கூட தக்கவைக்காத அணிக்கு 3 “மேட்ச் கார்டு”களும் வழங்கப்படும்.

ஒவ்வொரு அணியிலும் 16 வீரர்களுக்கு குறையாமலும் 27 வீரர்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

அவர்களில் 9 பேர் வெளிநாட்டினராக இருக்கலாம். ஆடும் லெவனில் 4 வெளிநாட்டினர் மட்டுமே இடம்பெற வேண்டும்.

19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் விளையாடும் வீரர்கள் முதல் தர கிரிக்கெட் அல்லது லிஸ்ட் ஏ போட்டியில் விளையாடியிருந்தால் மட்டுமே ஐபிஎல் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்படுவார்கள்.

தற்போதைய நிலையில் ஓர் ஆண்டுக்கு மட்டுமே வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்படுகிறார்கள். கூடுதலாக இரண்டு ஆண்டுகள் வரை ஒரு வீரரின் ஒப்பந்தத்தை நீட்டிக்கலாம்.

இந்த நீட்டிப்பு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 15-ம் தேதிக்கு முன்னதாக செய்யப்பட வேண்டும் என பிசிசிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x