Published : 01 Oct 2013 12:45 PM
Last Updated : 01 Oct 2013 12:45 PM

அரையிறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ்

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் ராகுல் திராவிட் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

இப்போட்டித் தொடரில் அந்த அணி தொடர்ந்து 3-வது வெற்றியைப் பெற்றுள்ளது. அணியின் சொந்த ஊர் மைதானமான ஜெய்ப்பூரில் தொடர்ச்சியாக 11-வது வெற்றியைப் பெற்றுள்ளது.

ஜெய்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. அந்த அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவர்களில் 120 ரன்களுக்கு சுருண்டது பெர்த் ஸ்கார்ச்சர்ஸ். அந்த அணியில் அதிகபட்சமாக ஆடம் வோக்ஸ் 27 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் யாரும் 20 ரன்களைக்கூட எட்டவில்லை.

ராஜஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் கெவோன் ஹூப்பர் 4 விக்கெட்டுகளும், ஜேம்ஸ் பௌல்க்னெர், பிரவீண் தாம்பே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணி 16.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 121 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சஞ்சு சாம்சன் (50 ரன்), ரஹானே (62 ரன்) அரைசதம் அடித்தனர். தொடக்க வீரராகக் களமிறங்கிய கேப்டன் டிராவிட் ரன் ஏதும் எடுக்கவில்லை.

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் ஏற்கெனவே பங்கேற்ற 3 போட்டிகளில் வெற்றி பெற்று முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. இந்நிலையில் ஏ பிரிவில் பங்கேற்ற 3 போட்டிகளிலும் வென்று ராஜஸ்தான் ராயல்ஸ் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x