

பாராலிம்பிக் நிறைவு விழாவில் இந்திய தேசியக் கொடியை தமிழக வீரர் தங்கவேலு மாரியப்பன் ஏந்திச் செல்வார் என்று இந்திய பாராலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.
ரியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்கில் உயரம் தாண்டும் போட்டியில் சேலத்தை சேர்ந்த தங்கவேலு மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்று தமிழகத்துக்கு மட்டுமின்றி, நாட்டுக்கே பெருமை சேர்த்தார்.
பதக்கம் வென்ற அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா என அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். தமிழக அரசு தங்கவேலுவுக்கு ரூ. 2 கோடி பரிசு அறிவித்து கவுரவித்தது.
இந்நிலையில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தமிழக வீரர் மாரியப்பனை கவுரவிக்கும் வகையில் 18-ம் தேதி நடைபெறும் பாராலிம்பிக் நிறைவு விழாவில் இந்தியா சார்பில் தேசியக் கொடியை மாரியப்பன் ஏந்திச் செல்வார் என இந்திய பாராலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.