Published : 18 Apr 2014 10:00 AM
Last Updated : 18 Apr 2014 10:00 AM

சூப்பர் கிங்ஸ்-பஞ்சாப் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐபிஎல் முறைகேட்டில் சிக்கி திக்குமுக்காடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சீசன்களைப் போலவே இந்த முறையும் சிறப்பாக ஆடும் முனைப்பில் களமிறங்குகிறது. கடந்த 6 ஐபிஎல் போட்டிகளில் அபாரமாக ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் இரு முறை சாம்பியன் பட்டம் வென்றதோடு, மூன்று முறை இறுதிச்சுற்று வரையும், ஒரு முறை அரையிறுதி வரையும் முன்னேறியது. இந்த முறை அரையிறுதிக்கு முன்னேறுவதே எங்களின் இலக்கு என கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

கடந்த முறை சென்னை அணிக்காக விளையாடிய முக்கிய வீரர்களான மைக் ஹசி, முரளி விஜய் ஆகியோர் இந்த முறை அணி மாறிவிட்டாலும் பிரென்டன் மெக்கல்லம், டுவைன் ஸ்மித் ஆகியோரின் வருகை பேட்டிங்கிற்கு பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது.

டுவைன் ஸ்மித், பிரென்டன் மெக்கல்லம் அல்லது டூ பிளெஸ்ஸி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மிடில் ஆர்டரில் ரெய்னா, கேப்டன் தோனி, டுவைன் பிராவோ, ஜடேஜா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். சுழற்பந்து வீச்சில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் வலு சேர்க்கின்றனர்.

தோனி, ரெய்னா, அஸ்வின், ஜடேஜா, டுவைன் பிராவோ, பிரென்டன் மெக்கல்லம், டுவைன் ஸ்மித், டூ பிளெஸ்ஸி அல்லது மிதுன் மன்ஹாஸ், மோஹித் சர்மா, ஈஸ்வர் பாண்டே, பென் ஹில்பெனாஸ் அல்லது சாமுவேல் பத்ரி ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெறுவார்கள்

என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் சாமுவேல் பத்ரி 11 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் எடுத்தவர்கள் வரிசையில் 3-வது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.கடந்த முறை 6-வது இடத்தைப் பிடித்த பஞ்சாப் அணி, இந்த முறை மனன் வோரா, ஷான் மார்ஷ் உள்ளிட்டோரைத் தவிர முற்றிலும் புதிய வீரர்களுடன் களம் காண்கிறது. ஜார்ஜ் பெய்லியின் தலைமையில் களம் காணும் பஞ்சாப் அணிக்கு சேவாக்கின் வருகை பெரும் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஓர் ஆண்டாக இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாமல் இருக்கும் சேவாக் மீண்டும் பார்முக்கு திரும்புவதற்கு இந்த ஐபிஎல் போட்டி நல்ல வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சேவாக், மன்தீப் சிங் ஆகியோர் அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மிடில் ஆர்டரில் சேதேஷ்வர் புஜாரா, ஜார்ஜ் பெய்லி, டேவிட் மில்லர், கிளன் மேக்ஸ்வெல் ஆகியோர் இடம்பெறலாம். இவர்கள் எப்படி ஆடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்த அணியின் ரன் குவிப்பும், வெற்றி வாய்ப்பும் அமையும்.

விக்கெட் கீப்பராக விருத்திமான் சாஹா அல்லது மனன் வோராவும், ஆல்ரவுண்டர் இடத்தில் ரிஷிதவணும், வேகப்பந்து வீச்சாளராக மிட்செல் ஜான்சன், பாலாஜி ஆகியோரும், சுழற்பந்து வீச்சாளராக முரளி கார்த்தியும் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபகாலமாக அபாரமாக பந்துவீசி வரும் ஜான்சன், சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருப்பார் என நம்பலாம்.

இரு அணிகளுமே சமபலம் கொண்டவை என்பதால் முதல் போட்டியை வெற்றியோடு தொடங்க முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது என தெரிகிறது.

போட்டி நேரம் : மாலை 4, நேரடி ஒளிபரப்பு : சோனி சிக்ஸ், செட் மேக்ஸ்

அபுதாபியில் இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் ஷிகர் தவண் தலைமையிலான சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும், ஷேன் வாட்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. போட்டி நேரம்: இரவு 8

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x