Last Updated : 08 Sep, 2016 04:59 PM

 

Published : 08 Sep 2016 04:59 PM
Last Updated : 08 Sep 2016 04:59 PM

2020 ஒலிம்பிக்கில் பங்கேற்க மக்களிடம் நிதியுதவி நாடும் இந்திய நீச்சல் சாம்பியன் வீராங்கனை

"நான் 2020-ல் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க விரும்புகிறேன்"

2020 ஒலிம்பிக்கில் திறந்தவெளி நீச்சல் போட்டிகளில் பங்கேற்க மக்களின் நிதி உதவியை நாடியிருக்கிறார் திறந்தவெளி நீச்சல் போட்டியில் உலக சாதனை புரிந்த நீச்சல் வீராங்கனையான பக்தி சர்மா.

அண்டார்டிக் கடலில் 1.4 மைல்கள் தூரத்தை 52 நிமிடங்களில் கடந்து உலக சாதனை படைத்தவர் இந்தியாவின் பக்தி சர்மா. டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தனது பயிற்சிக்கு வேண்டிய நிதிக்காக பொது மக்களின் உதவியை நாடியிருக்கிறார்.

இந்தியாவின் திறந்தவெளி நீச்சல் போட்டிகளின் சாம்பியனான பக்தி ஷர்மா(26) ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்தவர். நீச்சல் மீதிருந்த ஆர்வத்தால் தனது இரண்டு வயது முதல் நீச்சல் கற்று வந்துள்ளார்.

ஒலிம்பிக்கில் பங்கேற்க எனது பயிற்சிக்கு பண உதவி தேவை

இது தொடர்பாக பக்தி சர்மா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, "என் பயிற்சிக்கு போதிய பணம் இல்லாமல் சிரமப்பட்டு வந்தேன். அதன்பின் > fueladream.com> என்ற குழுவை தொடர்பு கொண்டு என் நிலையை விளக்கினேன். அவர்களும் எனக்கு உதவ முடிவு செய்தனர். இணையத்தில் மனு(online petition) ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் 2.5 லட்ச ரூபாயை எனது பயிற்சிக்காக திரட்டி தந்தனர். ஆனால் இந்த தொகை எனது பயிற்சிக்கு போதாது. ஒலிம்பிக்கில் பங்கேற்க அடுத்த நான்கு ஆண்டுகளும் எனது பயிற்சிக்காக சுமார் ஒரு கோடிவரை தேவைப்படுகிறது.

இதற்கு முன்னரும் இதே போன்ற உதவியை நான் உலக சாதனை செய்வதற்கு தேவைப்பட்ட பயிற்சிக்காக பெற்றுள்ளேன்.

இந்தியா சார்பில் 2020 டோக்கியோவில் நடைபெறும் திறந்தவெளி நீச்சல் போட்டியில் பங்கேற்க விரும்புகிறேன்

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் திறந்தவெளி நீச்சல் போட்டிகள் ஒலிம்பிக்கில் சேர்த்து கொள்ளப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் திறந்தவெளி நீச்சல் போட்டிகளில் பங்கேற்க விரும்புகிறேன். நிச்சயம் இந்தியாவுக்காக பதக்கம் வெல்வேன். சர்வதேச அரங்கில் நாட்டுக்காக தலைமை தாங்குவதை காட்டிலும் பெருமை வேறொன்று இல்லை"என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x