

வேகப் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்திற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டிருப்பது, தனிப்பட்ட முறையில் வருத்தம் தருவதாக, முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சவுரங் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், “ஸ்ரீசாந்த் அப்படிச் செய்திருந்தால், இந்த முடிவு சரியானதே. அவருடைய திறமை வீணாகிவிட்டது என்கிற வகையில், அவருக்காக வருந்துகிறேன்” என்றார்.
முன்னதாக, ஐபிஎல் போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்திற்கும், அங்கீத் சவானுக்கும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
“ஸ்ரீசாந்திற்கு எவ்விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் பிசிசிஐ தொடர்பான செயற்பாடுகளிலும் ஈடுப்பட முடியாது” என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டவட்டமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.