Published : 05 Feb 2014 11:16 AM
Last Updated : 05 Feb 2014 11:16 AM

ஏடிபி சேலஞ்சர்: 2-வது சுற்றில் சோம்தேவ், பாம்ப்ரி; காயம் காரணமாக வெளியேறினார் ராம்குமார்

சென்னையில் நடைபெற்று வரும் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சோம்தேவ், யூகி பாம்ப்ரி, சாகேத் மைனேனி, ஸ்ரீராம் பாலாஜி உள்ளிட்டோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

செவ்வாய்க்கிழமை நடை பெற்ற முதல் சுற்றில் சோம்தேவ்-ராம்குமார் இடையிலான ஆட்டத்தில் சோம்தேவ் 7-5, 5-4 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது ராம்குமார் காயம் காரணமாக போட்டியிலிருந்து வெளியேறினார். இதனால் சோம்தேவ் 2-வது சுற்றுக்கு முன்னேறினார். அவர் தனது 2-வது சுற்றில் நியூஸிலாந்தின் மைக்கேல் வீனஸை சந்திக்கிறார். வீனஸ் தனது முதல் சுற்றில் 6-7 (3), 7-6 (1), 6-1 என்ற செட் கணக்கில் வைல்ட்கார்ட் வீரரான தமிழகத்தின் ஜீவன் நெடுஞ்செழியனைத் தோற்கடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி 6-2, 6-4 என்ற நேர் செட்களில் சீன தைபேவின் லியாங்-சி ஹுயாங்கை தோற்கடித்தார். யூகி தனது 2-வது சுற்றில் ஸ்பெயினின் கிரானோலர்ஸை சந்திக்கிறார். இந்தியாவின் மற்றொரு வீரரான சனம் சிங் 6-4, 7-5 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் டேவிஸ் கெஸ்ஸைத் தோற்கடித்தார். சனம் சிங் அடுத்த சுற்றில் தமிழகத்தின் ராம் பாலாஜியை சந்திக்கிறார். பாலாஜி தனது முதல் சுற்றில் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான பிரஜ்னீஸைத் தோற்கடித்தார். இந்தியாவின் சாகேத் மைனேனி 6-4, 6-2 என்ற நேர் செட்களில் எகிப்தின் முகமது சாஃப்வாட்டைத் தோற்கடித்தார்.

இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி-ஸ்லோவேகியாவின் பிளேஸ் ரோலா ஜோடி 7-5, 5-7, 6-10 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் சஞ்சய் ரதிவதானா-சன்சாட் ரதிவதானா ஜோடியிடம் தோல்வி கண்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x