Published : 25 Sep 2013 09:19 PM
Last Updated : 25 Sep 2013 09:19 PM

பிசிசிஐ தடையை சட்ட ரீதியாக எதிர்ப்பேன்: லலித் மோடி

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தனக்கு விதித்துள்ள ஆயுட்கால தடையைச் சட்ட ரீதியாக எதிர்க்க முடிவு செய்துள்ளதாக லலித் மோடி தெரிவித்துள்ளார்.

சென்னையில் புதன்கிழமை நடந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சிறப்புப் பொதுக் குழுக் கூட்டத்தில் ஐ.பி.எல். போட்டிகளின் ஆணையரான லலித் மோடிக்கு ஆயுட்காலத் தடை விதிக்கப்பட்டது.

சென்னையில் ஒரு பிரபல தனியார் ஹோட்டலில் நடந்த இந்த கூட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி மோடி உச்ச நீதிமன்றத்தை அணுகினார். ஆனால், உச்ச நீதிமன்றம கூட்டத்திற்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. உச்ச நீதி மன்றம் மறுத்துவிட்ட சில மணி நேரங்களிலேயே வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு மோடிக்கு வாழ்நாள் தடை விதித்தது.

கூட்டத்தில் வாரியத்தின் 32 (4) விதிப்படி மோடிக்கு அனுப்பப்பட்ட நோட்டீசும் மோடி மீதான புகார் குறித்த விசாரணை அறிக்கையும் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டன. “லலித் மோடி, மோசமான நடத்தை மற்றும் ஒழுங்கீனத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதால் வாரிய விதிகள் மற்றும் முறைப்படுத்தல் சட்டம் 32-ஆவது விதியின் கீழ் அவர் வாரியத்திலிருந்து நீக்கப்படுவதாகவும் எதிர்காலத்தில் கிரிக்கெட் வாரியத்தில் அவர் எந்தப் பதவியிலும் அமர முடியாது எனவும் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

ஐ.பி.எல்.லை உருவாக்கியதன் மூலம் கிரிக்கெட்டிற்கு உலக அளவில் புதிய ஈர்ப்பை ஏற்படுத்தியவர் மோடி. சியர் கேர்ல்ஸ், ஸ்டிராட்டஜிக் டைம் அவுட், சினிமாவின் கவர்சியைக் கிரிக்கெட்டுக்குப் பயன்படுத்திக்கொள்ளுதல், ஒளிபரப்பில் புதிய அம்சங்கள் எனப் பொழுதுபோக்கு அம்சங்களைக் கூட்டி ஐ.பி.எல்.லுக்குப் புதிய கவர்ச்சியையும் கூடுதல் வருமானத்துக்கான சாத்தியங்களையும் ஏற்படுத்தினார்.

ஐ.பி.எல்.லை முன்வைத்து கிரிக்கெட்டுக்கான பார்வையாளர்களை அதிகரிக்கச் செய்ததில் இவரது உத்திகளுக்கு முக்கியப் பங்கு இருந்தது. ஐ.பி.எல்.லை உருவாக்கியதோடு அல்லாமல் அதன் ஆணையராகவும் செயல்பட்டுவந்த மோடி 2010ஆம் ஆண்டிலிருந்து சர்ச்சைகளில் சிக்கத் தொடங்கினார்.

ஐ.பி.எல்லில் நடந்த பல ஊழல்களில் மோடியின் பெயரும் அடிபட, ஏப்ரல் 2010ல் ஐ.பி.எல் தலைவர் மற்றும் ஆணையர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆணையர் பதவியிலிருந்து விலகிய சில நாட்களிலேயே மோடி லண்டனுக்குப் போய் செட்டில் ஆனது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தன் மீதான புகார்களை அவர் மறுத்துவந்தாலும வாரியத்தின் கமிட்டி முன்பு அவர் ஆஜரானதில்லை.

தன் மீதான வாழ்நாள் தடை எதிர்பார்த்ததுதான் எனவும் அதைச் சட்ட ரீதியாகச் சந்திக்கப்போவதாகவும் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் அறிவித்தார் மோடி. கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் இன்று ஒரு மோசமான நாள். வாரியத்திற்கு கிரிக்கெட்டில் உண்மையாக எந்த அக்கறையும் இல்லை என்றார் அவர்.

மோடி மீதான புகார்களை விசாரித்த குழுவில் அருண் ஜெட்லி மற்றும் ஜோதிராதித்யா சிந்தியா இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x