Published : 12 Sep 2018 09:41 AM
Last Updated : 12 Sep 2018 09:41 AM
ஓவல் டெஸ்ட் போட்டி நேற்று இங்கிலாந்து வெற்றியுடன் முடிந்தாலும் தேநீர் இடைவேளையின் போது இந்திய வெற்றிச் சாத்தியமும் வெகுவாக இருந்தது.
தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 298 ரன்கள். ராகுல் 142 ரிஷப் பந்த் 101. இருவரும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அப்போது 33 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சாத்தியமும் இருந்தது.
இங்கிலாந்தும் ஸ்லிப்பையெல்லாம் அகற்றிவிட்டு பந்து வீசுமாறு செய்தனர் ராகுலும் ரிஷப் பந்த்தும், இங்கிலாந்து ஷார்ட் பிட்ச் பந்துவீச்சு உத்தியைக் கையாண்டது இந்திய அணிக்கு ஒரு நம்பிக்கைக் கீற்றை அப்போது அளித்தது. காரணம் மந்தமான பிட்சில் ஷார்ட் பிட்ச் உத்தி செல்லாது, ராகுலும், பந்த்தும் தூக்கித் தூக்கி அடித்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் கேப்டன் விராட் கோலியும் நம்மைப் போலவே தேநீர் இடைவேளையின் போது இந்திய வெற்றியை எதிர்நோக்கியுள்ளார்.
இது பற்றி அவர் கூறும்போது, “ஆம்! ராகுல், ரிஷப் பந்த் இருக்கும் போது வெற்றியை எதிர்நோக்கினோம் ஆனால் அதே வேளையில் இருவரும் கடைசி வரை நிற்க வேண்டும், இங்கிலாந்து அணியும் இருவரில் ஒருவர் அவுட் ஆனவுடன் புதிய பந்தை எடுக்கக் காத்திருந்தனர்.
ஆம் உள்ளபடியே தேநீர் இடைவேளையின் போது வெற்றி பெறுவோம் என்று நினைத்தோம் என்பது உண்மைதான். காரணம், இவர்கள் இருவரும் பேட் செய்த விதம் அப்படி. மேலும் தேநீர் இடைவேளையின் போது அனைத்து முடிவுகளும் சாத்தியமாக இருந்தன.
ரிஷப் பந்த் ராகுலின் அபாரமான ஆட்டம் எங்களையும் தேநீர் இடைவேளையின் போது அப்படி நினைக்க வைத்தது என்பது உண்மையே” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT