Last Updated : 20 Sep, 2018 09:55 PM

 

Published : 20 Sep 2018 09:55 PM
Last Updated : 20 Sep 2018 09:55 PM

ஆசியக் கோப்பை: அக்சர் படேல், ஷர்துல், ஹர்திக் பாண்டியா நீக்கம்: 3 வீரர்களுக்கு அழைப்பு

காயம் காரணமாக ஆசியக் கோப்பைப் போட்டித்தொடரில் இருந்து இந்திய அணி வீரர்கள் அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது

துபாயில் நடந்து வரும் ஆசியக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தின் போது, இந்திய வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு முதுகுப் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மைதானத்தில் சுருண்டு விழுந்ததால், ஸ்ட்ரெச்சரில் கிடத்தி அழைத்துச்செல்லப்பட்டார்.

ஹர்திக் பாண்டியா கடந்த 12 மாதங்களில் இதுவரை 44 போட்டிகளில் விளையாடியுள்ளார். ரோஹித் சர்மா 46 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இந்திய அணியில் மற்ற வீரர்களுக்குக் கொடுக்கப்பட்ட பளுவைக் காட்டிலும் ஹர்திக் பாண்டியாவுக்கு கொடுக்கப்பட்ட பளு அதிகமாகும். ஐபிஎல் சீசன் முழுவதிலும் பாண்டியா விளையாடினார், அதன்பின் ஓய்வின்றி இங்கிலாந்து தொடரில் அனைத்து வகையான போட்டிகளிலும் முழுமையாக விளையாடிவிட்டு ஆசியக் கோப்பைக்கும் ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, ஆசியக் கோப்பைத் தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகுவதாக அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஃபீல்டிங் செய்யும் போது அக்சர் படேலுக்கு கையில் காயம் ஏற்பட்டு இருந்தது. ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது ஷர்துல் தாக்கூருக்கு வலது இடுப்புப் பகுதியில் பிடிப்பு ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று வருகிறார் . இதையடுத்து ஹர்திக் பாண்டியோவோடு சேர்த்து, சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல், வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர் ஆகியோரும் நீக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.

இதைத் தொடர்ந்து இவர்களுக்குப் பதிலாக, 3 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஹர்திக் பாண்டியாவுக்குப் பதிலாக தீபக் சாஹரும், அக்ஸர் படேலுக்கு பதிலாக ரவிந்திர ஜடேஜாவும், ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக சித்தார் கவுலும் அழைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இவர்கள் நாளைக்குள் இந்திய அணியில் இணைவார்கள் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x