Published : 18 Sep 2018 09:45 AM
Last Updated : 18 Sep 2018 09:45 AM

காவலர் உடையில் கருத்து கூறி கைதான டிவி நடிகை நிலானியின் நண்பர் தற்கொலை: போலீஸில் புகார் அளித்ததால் விரக்தி என தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் காந்தி லலித் குமார். சென்னையில் திரைப்பட உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்தார். தி.மலை மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத் தலைவராகவும் இருந்தார்.

இந்நிலையில், சின்னத்திரை நடிகை நிலானியுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. ஏற்கெனவே திருமணமான நிலானி, கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தவர். காவிரி பிரச்சினை, ஐபிஎல் போட்டி தடை உள்ளிட்ட விவகாரங்களில் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தார்.

சீரியல் படப்பிடிப்பின் நடுவே, காவல் அதிகாரியின் சீருடையில் இருந்த அவர், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காவல் துறைக்கு எதிரான கருத்துகளை முகநூலில் வீடியோ பதிவாக வெளியிட்டார். இதையடுத்து, குன்னூரில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரை ஜாமீனில் எடுக்க லலித்குமார்தான் மிகவும் உதவிகரமாக இருந்தார். அதுமுதல் இருவரும் நெருக்கமாக பழகிவந்த நிலையில், லலித்குமாரை விட்டு நிலானி திடீரென பிரிந்ததாகக் கூறப்படுகிறது.

சென்னை மயிலாப்பூரில் கடந்த 15-ம் தேதி சின்னத்திரை படப்பிடிப்பில் நிலானியை சந்தித்த லலித்குமார், தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, லலித்குமார் தன்னை தொந்தரவு செய்வதாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் நிலானி 16-ம் தேதி புகார் அளித்தார். லலித்குமாரிடம் மயிலாப்பூர் போலீஸார் விசாரித் தனர். நிலானியை இனி தொந்தரவு செய்வதில்லை என்று உறுதி அளித்ததால், அவரை போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

காவல் நிலையத்தில் இருந்து கே.கே.நகர் சென்ற லலித்குமார், அங்கு தனியார் பள்ளி வளாகம் முன்பு, திடீரென தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அருகில் இருந்தவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரை உடனடியாக மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லலித்குமார் நேற்று அதிகாலை உயிரிழந்தார்.

நன்கு பழகிவந்த நிலையில் நிலானி திடீரென விலகியதோடு, தன் மீதே போலீஸில் புகார் கொடுத்த விரக்தியில் அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். லலித்குமார் தற்கொலைக்கு முன்பு கடிதம் எதுவும் எழுதி வைத்துள்ளாரா என்றும் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x