Published : 27 Sep 2018 03:17 PM
Last Updated : 27 Sep 2018 03:17 PM
ஒருநாள் அணியில் சீராக வாய்ப்பளிக்காதது ‘சில வேளைகளில் வெறுப்பாகவும் ஏமாற்றமாகவும் உள்ளது’ என்று கே.எல்.ராகுல் மனம் திறந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: அணி நிர்வாகம் என்னுடன் அமர்ந்து என்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று விளக்கினர். இது எனக்கு என்னைத் தயார் படுத்திக் கொள்ளவும் எந்தப் பாதையை நோக்கி நான் செல்கிறேன் என்பதற்கும் உதவுகிறது.
எனக்கு வாய்ப்பளிக்காத காலக்கட்டத்தை என் திறமையையும் உடற்தகுதியையும் வளர்த்துக் கொள்ள நேரத்தைச் செலவிடுகிறேன். கிரிக்கெட் ஆடும் நாட்கள் நாங்கள் தெருவில் இருக்கும் நாட்கள் மிக அதிகம் எனவே உடற்தகுதி முக்கியமானது.
பல்வேறு நிலைகளில் இறங்கி ஆடுவது சவால்தான். நான் பொதுவாக எனது சிறுபிராயம் முதலே டாப் ஆர்டரில் இறங்கியே பழக்கப்பட்டவன், அதுதான் எனக்கு சவுகரியமானது. ஆனால் அணிக்காக கொஞ்சம் நாம் விட்டுக் கொடுத்துத்தான் ஆகவேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஒருநாள் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் நான் சோபிக்க முடியவில்லை. ஆனால் நானும் அதற்காக உழைத்துத்தான் வருகிறேன்.
நான் என்னுடைய பேட்டிங்கை எளிமையாக வைத்துக் கொள்ள விரும்புகிறேன், பந்தைப் பார் அடி என்றஅணுகுமுறை. எவ்வளவு வாய்ப்புகள் எனக்குக் கிடைக்கிறது என்பது பற்றி நான் கவலைப்படுவதில்லை. ஏனெனில் அணிக்குள் திடீரென எடுக்கப்படுகிறேன் திடீரென உட்கார வைக்கப்படுகிறேன்... இப்படி வருவதும் போவதுமாக இருந்தால் களத்தில் இறங்கியவுடன் உங்களுக்கான ஒத்திசைவு கிடைக்காது. இறங்கியவுடன் ஆடுவதெல்லாம் கடினம். அதனால்தான் ஆப்கான் அணிக்கு எதிராகக் கூட கொஞ்சம் பந்துகள் ஆடிவிட்டு ஷாட்டுக்குச் சென்றேன்.
மிடில் ஆர்டரில் பெரிய கஷ்டம் என்னவெனில் ஒன்று நாம் அடித்து ஆடுவது எவ்வளவு வேகம் அதிவேகம் என்பதும் கால அவகாசம் எடுத்துக் கொள்ளும்போது எவ்வளவு மந்தம் அதிமந்தம் என்று நமக்குப் புரியாது. நான் இறங்கும் போது கூட நேரடியாக சிங்கிள் எடுத்து ரொடேட் செய்வது கடினமாகவே இருந்தது. பவுண்டரிகள் அடிக்க கொஞ்சம் அவகாசம் தேவைப்படும்.
இவ்வாறு கூறினார் ராகுல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT