Last Updated : 03 Jun, 2019 08:56 AM

 

Published : 03 Jun 2019 08:56 AM
Last Updated : 03 Jun 2019 08:56 AM

மீண்டும் சோக்கர்ஸ் ஆன தென் ஆப்பிரிக்கா: வங்கதேசம் வரலாற்று வெற்றி: டூப்பிளசியின் திமிர்பேச்சுக்கு சரியான பதிலடி

சகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம் ஆகியோரின் அரைசதம், மகமதுல்லாவின் அதிரடி ஆட்டம், கட்டுக்கோப்பான பந்துவீச்சு ஆகியவற்றால், லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த உலகக்கோப்பைப் போட்டியின் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வரலாற்று வெற்றிபெற்றது வங்கதேசம் அணி.

முதலில் பேட் செய்த வங்கதேசம் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் குவித்தது. 331 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் மட்டுமே சேர்த்து 21 ரன்களில் தோல்விஅடைந்தது.

அதிவேக 250 விக்கெட்

ஆட்டநாயகனாக அனுபவ வீரர் சஹிப் அல்ஹசன் தேர்வு செய்யப்பட்டார். அதுமட்டுமல்லாமல் ஒருநாள் போட்டிகளில் 199 போட்டிகளில் வேகமாக 250 விக்கெட்டுகள், 5 ஆயிரம் ரன்களை எட்டிய 5-வது வீரர் எனும் பெருமையை சஹிப் அல்ஹசன் பெற்றார். இதற்கு முன் அப்துல் ரசாக்(பாக்.258), அப்ரிடி(273வி), காலிஸ்(296வி), ஜெயசூர்யா(303வி) ஆகியோர் விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்கள்.

சோக்கர்ஸ் எனும் தீரா பழி

மிகமுக்கியமான தருணம், போட்டியில் கடைசி நேரத்தில் நெருக்கடியையும், அழுத்தத்தையும் சமாளிக்க முடியாமல் தோல்வி அடைபவர்களை ஆங்கிலத்தில் “சோக்கர்ஸ்” என்று அழைப்பார்கள். இந்த அவப்பெயர் தென் ஆப்பிரிக்காவுக்கு நீண்ட ஆண்டுகளாக இருந்து வருகிறது.

வழக்கமாக அரையிறுதி, காலிறுதியில்தான் தென் ஆப்பிரிக்கா தாங்கள் சோக்கர்ஸ் என இயல்பாகவே வெளிப்படுத்துவார்கள், ஆனால், என்னவோ தெரியவில்லை, இந்த உலகக் கோப்பைப் போட்டியில் தொடக்கத்திலேயே தாங்கள் சோக்கர்ஸ் என்பதை காட்டிவிட்டார்கள்.

தென் ஆப்பிரிக்க அணி உலகக்கோப்பையில் சேஸிங் செய்து 14 முறை 300 ரன்களுக்கு மேல் அடித்தும்அதில்ஒருமுறை மட்டுமே வென்றுள்ளது.

இந்த தோல்வி மூலம் தென் ஆப்பிரிக்காவின் மீதான வெற்றியின் அழுத்தம் அதிகரிக்கத் தொடங்க இருக்கிறது. இருதோல்வியின் பாதிப்பு லீக்சுற்றின் முடிவில் தென் ஆப்பிரிக்காவுக்கு தெரியவரும். இந்த தோல்வியால் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிக்கட்டாயத்துக்கு தென் ஆப்பிரிக்கா தள்ளப்பட்டுள்ளது.

வரலாற்று வெற்றி

வங்கதேசத்துக்கு இது வரலாற்று வெற்றிதான். ஏனென்றால், உலகக் கோப்பைப் போட்டியில் இதற்கு முன் வங்கதேசம் அணி முதல் போட்டியில் வென்றது இல்லை, அதிலும் 330 ரன்கள் எனும் மிகப்பெரிய ஸ்கோரை எட்டியதில்லை, குறிப்பாக வலிமையான தென் ஆப்பிரிக்க அணியை முதல் ஆட்டத்தில் வீழ்த்தியதும் இல்லை.

இவை மூன்றையும் ஒரே போட்டியில் செய்து வங்கதேசம் மைல்கல் வெற்றி பெற்றுள்ளது. உலகக் கோப்பைப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 2-வதுமுறையாக வங்கதேசம் வீழ்த்தியுள்ளது.

12வது வெற்றி

உலகக் கோப்பைப் போட்டியில் வங்கதேசம் பெறும் 12-வது வெற்றி இதுவாகும். இதற்குமுன் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளை 2 முறையும் இந்தியா, பாகிஸ்தான், நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான், அயர்லாந்து பெர்முடாவை தலா ஒருமுறையும் வீழ்த்தியுள்ளது வங்கேதசம்

எச்சரிக்கை செய்தி

உலகக் கோப்பையில் தங்களை குறைத்து மதிப்பிட்ட அனைத்து அணிகளுக்கும் இந்த வெற்றி மூலம் எச்சரிக்கையை செய்தியை வங்கதேசம் விடுத்துள்ளது. எப்படி வேண்டுமானாலும், தங்களை வீழ்த்திவிடலாம் என்று நினைத்துவராதீர்கள், திட்டமிடலுடன் வாருங்கள் என்று தங்களின் வலிமையை வெளிப்படுத்தியுள்ளது வங்கதேசம்.

கடந்த காலங்களில்.....

கடந்த காலங்களில் இரு அணிகளுமே ஏதாவது ஒரு எல்லையின் ஓரத்துக்குச் சென்றுதான் தோற்றுள்ளார்கள். கடந்த 2003 உலகக்கோப்பைப் போட்டியில் ப்ளோபன்டைன் நகரில் நடந்த ஆட்டத்தில் வங்கதேசத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வென்றது.

2007-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியில் புராவிடன்ஸ் நகரில் நடந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 67ரன்களில் சூப்பர்8 சுற்றில் வங்கதேசம் தோற்கடித்தது. 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையில் மிர்பூர்ஆட்டத்தில் வங்கதேசத்தை சொந்தமண்ணில் வைத்து 78 ரன்களுக்கு ஆல்அவுட் ஆக்கி 208 ரன்களில் தென் ஆப்பிரிக்கா வென்றது.

இப்போது 21 ரன்களில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியுள்ளது வங்கதேசம்.

தோல்விக்கு காரணம்

கேப்டன் டூப்பிளசியின் திறனற்ற கேப்டன்ஷியும், களத்தில் மதிநுட்பம் இல்லாத செயல்பாடுகள், திமிர்தனமான பேச்சுதான் தென் ஆப்பிரிக்க அணியின் தோல்விக்கு முக்கியக் காரணம்.

டாஸ்வென்றவுடன் ஆடுகளத்தின் தன்மையை அறியாமல் வங்கதேசத்தை அடித்துநொறுக்கத்தான் கூடுதலாக வேகப்பந்துவீச்சாளர்களை கொண்டுவந்துள்ளோம் என்று டூப்பிளசி ஏளனமாகவும், திமிராகவும் பேசினார். ஆனால், வங்கதேசம் அணியினர் தென் ஆப்பிரிக்க அணியை அடித்து துவைத்துவிட்டனர்.

ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று தவறாகக் கணித்துவி்ட்டார் டூப்பிளசிஸ். தொடக்கத்தில் வேகப்பந்துவீச்சு சாதகமாக இருந்தாலும், அதன்பின் பேட்ஸ்மேன்களை நோக்கி பந்து மெதுவாக வரத் தொடங்கிவி்ட்டது. ஆடுகளத்தை கணிப்பதில் டூப்பிளசிஸ் தவறு செய்துவி்ட்டார்.

தோனியிடம் இருந்தும் கற்கவில்லையா

உலகின் மிகச்சிறந்த கேப்டன் என்று அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனியுடன் ஐபிஎல் போட்டியில் விளையாடியும் டூப்பிளசியால் கேப்டன்ஷிப் குறித்து தெரிந்து கொள்ளமுடியவில்லை என்பதை என்ன சொல்வது. அதிலும் ஐபிஎல் போட்டியில் இம்ரான் தாஹீரை மிகச்சிறப்பாக பயன்படுத்தினார் தோனி. ஆனால் தோனி பயன்படுத்திய அளவுக்குகூட இம்ரான் தாஹிரை டூப்பிளசிஸ் பயன்படுத்தவில்லை.

 இந்தப் போட்டியில் இம்ரான் தாஹிரை பவர்ப்ளேயில் பந்துவீச வைத்திருக்கலாம், அல்லது10 ஓவர்கள் முடிந்தபின் பயன்படுத்தி இருக்கலாம். 18 ஓவர்களுக்கு மேல் பயன்படுத்தும்போது, பேட்ஸ்மேன்கள் நன்கு செட்டில்ஆகிவிட்டதால் விக்கெட் வீழ்த்தமுடியாமல் போய்விட்டது.

அதுமட்டுமல்லாமல் டுமினி நன்றாக சுழற்பந்துவீசக்கூடியவர், இக்கட்டான நேரத்தில் விக்கெட் வீழ்த்தக்கூடிய திறமை உடையவர். தனது முதல் ஓவரில் 10 ரன்கள் வழங்கினா் என்பதற்காக ஒரு ஓவரோடு டூப்பிளசி நிறுத்தியதை என்ன சொல்ல.

பந்துவீச்சில் நேற்று லுங்கி இங்கிடி 4 ஓவர்கள் முடிவில் காயம் அடைந்தது தென் ஆப்பிரிக்காவுக்கு பெரும் பின்னடைவாகும். அடுத்து ஒருவாரத்துக்கு விளையாடமுடியாத வகையில் காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது தென் ஆப்பிரிக்காவுக்குஅதிர்ச்சியான செய்தி.

ஐபிஎல் போட்டியில் கட்டுக்கோப்புடன் பந்தவீசிய ரபடா நேற்று யார்கர்கள் வீச முயன்றும் லைன்-லென்த் கிடைக்காமல் சிரமப்பட்டார். ரன்களையும் அதிகமாக வாரி வழங்கினார்.

இருபேட்ஸ்மேன்கள் பாட்னர்ஷிப் அமைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது கேப்டனின் பொறுப்பு. ஆனால், வங்கதேசத்தின் சகிப் அல்ஹசனையும், முஷ்பிகுர் ரஹிமை நிற்க அனுமதி்த்துவி்ட்டார் டூப்பிளசிஸ்.

தென் ஆப்பிரிக்காவில் டுமினிக்கு அடுத்து களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் அதாவது கடைசிவரிசை பேட்ஸ்மேன்கள் நிலைக்காதது இலக்கை அடைய முடியாதமைக்கு காரணம். தென் ஆப்பிரிக்க அணியில் எந்த இரு வீரர்களும்100 ரன்களுக்கு மேல் நல்லவலுவான கூட்டணியை அமைக்கவில்லை என்பதை கவனிக்கத்தக்கது.  இதுபோன்ற பெரிய இலக்குகளை நோக்கி செல்லும்போது பெரியஅளவு பாட்னர்ஷிப் என்பது முக்கியம் அதை தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் தவறவிட்டுவி்ட்டார்கள்.

நல்ல தொடக்கம், பாட்னர்ஷிப்

வங்கதேசம் அணியைப் பொருத்தவரை தொடக்க வீரர்கள் தமிம் இக்பால், சவுமியா சர்க்கார் பொறுமையாக ஆடி நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார்கள். நடுவரிசையில் சஹிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹ்மான் இருவரும் சேர்ந்து 142 ரன்கள் சேர்த்ததுதான் ஆட்டத்தின் திருப்பமுனையாகும். இங்கிலாந்து கவுண்டி அணியில் சஹிப் அல் ஹசன் விளையாடி வந்த அனுபவம் அருமையாக நேற்று கைகொடுத்தது.

கடைசி ேநரத்தில் மொசாடக் ஹூசைன், மகமதுல்லா இருவரும் சேர்ந்து கடைசி 8ஓவர்களில் 80 ரன்கள் சேர்த்ததுதான் ஸ்கோர் உயர்வுக்கு காரணமாகும். ெதன் ஆப்பிரிக்க வீரர்களின் பந்துவீச்சை இருவரும் கடைசிநேரத்தில் துவம்சம் செய்துவிட்டனர்.

பந்துவீச்சில் வங்கதேச வீரர்கள் யாரும் 135கி.மீ வேகத்துக்கு மேல் யாரும்வீசமாட்டார்கள். ஆனாலும், தங்களின் துல்லியமான பந்துவீச்சால் தென் ஆப்பிரிக்காவுக்கு நெருக்கடி கொடுத்ததை பாராட்ட வேண்டும். குறிப்பாக சஹிப் அல் ஹசன், மெகதி ஹசன் ஆகியோரின் சுழற்பந்துவீச்சு மிகப்பெரிய பலம்.

அதிரடி சர்க்கார்

வங்கதேசம் அணிக்கு சவுமியா சர்க்கார், தமிம் இக்பால் நல்ல தொடக்கத்தை அளித்தனர். இங்கிடி, ரபாடாவின் ஆக்ரோஷமான வேகம், பவுன்ஸர்களை அனாயசமாக சமாளித்து பவுண்டரிகள் அடித்து ஸ்கோரை உயர்த்தினார்கள். அதிலும் ஷாட்பிட்ச் பவுன்ஸர்களை இருவரும் துல்லியமாக பவுண்டரிகளாக விளாசி ரன்வேகத்தை உயர்த்தினார்கள். முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்தநிலையில், இக்பால் 16 ரன்னில் வெளியேறினார்.

சூப்பர் பாட்னர்ஷிப்

அடுத்துவந்த சஹிப் அல் ஹசன், சவுமியாவுடன் சேர்ந்தார். சவுமியா நிதானமாக பேட் செய்த நிலையில் அடுத்து சிறிதுநேரத்தில் 30 பந்துகளில் 42ரன்கள் சேர்த்து மோரிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு சஹிப் அல்ஹசன், முஷ்பிகுர் ரஹ்மான் இருவரும் அமைத்த பாட்னர்ஷிப் அணிக்கு திருப்புமுனையாக அமைந்து. நிதானமாக விளையாடி ரன்களைச் சேர்த்தனர். இருவரையும் பிரிக்க டூப்பிளசிஸ் முயற்சித்தும் பயனில்லை. சஹிப் 54 பந்துகளிலும், ரஹிம் 52 பந்துகளிலும் அரைசதம் கடந்தனர். சஹிப் அல்ஹசனஅ 75 ரன்கள் சேர்த்த நிலையில் இம்ரான் தாஹிப்பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடங்கும்.

அடுத்துவந்த மிதுன் 21 ரன்களிலும், ரஹிம் 78 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மகமதுல்லா, மொசாடக் ஹூசைன் இருவரும் கடைசிநேரத்தில் அதிரடியாக ரன்களைக் குவித்தனர். கடைசி 10 ஓவர்களில் மட்டும் வங்கதேசம் அணி 90 ரன்களுக்குமேல் குவித்தது. மொசாடக் ஹூசைன் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். மகமதுல்லா 46ரன்னிலும், மெகதிஹசன் 5 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தென் ஆப்பிரிக்கத் தரப்பில் பெலுக்வேயோ, இம்ரான் தாஹிர், மோரிஸ் தலா 2 விக்கெட்டுகளைவீழ்த்தினார்கள்.

வீண் ரன்அவுட்

331 ரன்கள் எனும் இலக்குடன் தென் ஆப்பிரிக் அணி களமிறங்கியது. மார்க்ரம், டிகாக் நல்ல தொடக்கம் அளித்தார்கள். அதிரடியாக ஆடிய டீகாக் 23ரன்னில் வீணாக ரன்அவுட் செய்யப்பட்டார். பின்னர் மார்க்ரம், டூப்பிளசிஸ் இணைந்து ஸ்கோரை உயர்த்தினர். மார்்க்ரம் 45ரன்கள் சேர்த்திருந்தபோது, ஷகிப்பந்தவீச்சில் போல்டாகி வெளிேயறினார்.

கேப்டன் டூப்பிளசிஸ் அரைசதம் அடித்து 62ரன்னில் மெஹதி ஹசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.அதன்பின் டேவிட் மில்லர், வேண்டர் டூசைன் இருவரும் நிதானமாக பேட் செய்து ஸ்கோரை உயர்த்தினர். 38 ரன்களில் மில்லரை ஆட்டமிழக்கச்செய்தார் முஸ்தபிசுர், சைபுதீன் பந்துவீச்சில் 41 ரன்னில் வேண்டர் வெளியேறினார்.

40-வது ஓவரில் தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் என்றகணக்கில் தடுமாறியது. பெலுக்வயோ 8, மோரிஸ் 10 ரன்களில் ஏமாற்றம் அளிக்க, நம்பிக்கை தந்த டுமினியும் 45 ரன்களில் நடையை கட்டினார். கடைசியில் ரபாடா 13 ரன்னிலும், தாஹிர் 10ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 309ரன்கள் சேர்்த்து தென் ஆப்பிரிக்கா தோல்வி அடைந்தது.

வங்கதேசம் தரப்பில் முஸ்தபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும்,சைபுதீன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x